India

தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டி போர்வெல் குழியில் போட்ட மகன்.. விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் பரசுராம குலாலி (54). இவர் முதோலை புறநகர் பகுதியில் உள்ள, மாண்டூர் பைபாஸ் அருகே தனது தோட்டத்தில் தங்கி வந்துள்ளார். குடிபழக்கத்தில் மூழ்கி போன பரசுராம அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பரசுராம, அவரது சொந்த மகன் வித்தல குழலி (20) என்பவரை தகாத வார்த்தைகளில் பேசி அடித்து துண்புறுத்தியுள்ளார். மேலும் குடிபோதையில் கொடூரமான முறையில் மகனை அடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த வித்தல தனது தந்தையை அருகில் இருந்த கட்டையால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பரசுராம துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தந்தையின் சடலத்தை மறைப்பதற்காக, அவரது தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் உடலை போடுவது என முடிவெடுத்து கொண்டுச் சென்றுள்ளார்.

ஆனால், உடல் ஆழ்துளை கிணற்றில் இறங்காததால், கோடாரியைக் கொண்டுவந்து உடலை, 30க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் போட்டுள்ளார். பின்னர் எதுவும் நடக்காதது போல வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் துர்நாற்றம் வீசியுள்ளதை அறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், உடலை மீட்டு அரசு மருத்துவமனையின் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி மகனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மகன் கொலையை ஒப்புக்கொண்டதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தகராறு செய்த தந்தையை சொந்த மகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல்.. பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கத்தின் AUDIO வெளியாகி அதிர்ச்சி!