India

“சத்தமா பேசாத.. சுத்தமா பிடிக்காது..” -பாட்டு கெட்டவரை தட்டி கேட்ட பெண்.. சரமாரியாக தாக்கிய நபர் !

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் அமைந்துள்ளது சதார் பஜார். இங்கு கீதா ராணி (52) என்ற பெண் ஒருவர் இருக்கிறார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பக்கத்து கடை உரிமையாளர் ஒருவர் சத்தமாக பாட்டுக்கேட்டுள்ளார். இதனால் அவர் கடைக்காரரிடம் சென்று கூறியுள்ளார். இருப்பினும் அதனை செவிகொடுக்காத அவர், பாடல் கேட்பதை தொடர்ந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த பெண் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து கடைக்காரரை எச்சரித்து சென்றுள்ளனர். இருந்த போதிலும், அன்று மாலையே அவர் மீண்டும் சத்தமாக பாட்டு கேட்டுள்ளார். இதனால் மீண்டும் கீதா ராணி வந்து பேசவே இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றவே அது கைகலப்பாக மாறி, கடைக்காரர் அந்த பெண்ணை தாக்கியுள்ளார். அதோடு அவரது சகோதரி மற்றும் தாயும் கீதா ராணியை முடியை பிடித்து கண்டபடி பேசி, கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் போலீசில் புகார் அளித்தால் இன்னும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பகிரங்க மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த கீதாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு அவர் சிகிச்சை பெற்ற பின்னர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 34 (பொது நோக்கம்), 323 (காயப்படுத்துதல்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது தலைமறைவாக இருக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நாட்டையே உலுக்கிய முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து: இன்று முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி!