India

நிர்வாண படம் காட்டி மிரட்டிய வாலிபர். வீட்டில் ரூ. 5 லட்சம் திருடிய சிறுமி: விசாரணையில் பகீர்!

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் 12 வயது மகளுக்குக் கடந்த 2019ம் ஆண்டு அமான் என்ற இளைஞரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து சிறுமியும் அந்த இளைஞரும் பேசி பழகி வந்துள்ளனர். பிறகு இது காதலாக மலர்ந்துள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் நாக்பாடா என்ற பகுதிக்கு சென்றுள்ளனர். இங்கு அறை ஒன்றில் சிறுமியை நிர்வாணமாக படம் எடுத்துள்ளார்.

பின்னர் இந்த படங்களைக் காட்டி அவரிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் கூறியுள்ளார் . இதனால் பயந்து போன சிறுமி வீட்டில் பணத்தை திருட முடிவெடுத்துள்ளார். அதன்படி வீட்டிலிருந்து முதலில் ரூ.3 லட்சத்தைத் திருடி அமானிடம் கொடுத்துள்ளார். இதன் பின்னரும் அவர் சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் மீண்டும் ரூ. 2 லட்சம் திருடிக் கொடுத்துள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து மிரட்டியதால் வீட்டிலிருந்து வைரம், தங்கம் என நகைகளைத் திருடிக் கொடுத்துள்ளார். தொடர்ந்து வீட்டிலிருந்து பணம் மற்றும் நகைகள் திருடுபோவதை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

பின்னர் போலிஸார் வீட்டிலிருந்த அனைவரிடம் விசாரித்தபோது சிறுமி முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலிஸார் விசாரணை நடத்தியதில் அனைத்து உண்மையையும் சிறுமி ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போலிஸார் அமான் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடிவருகின்றனர்.

Also Read: சடலத்திற்குள் உயிரோடு இருந்த பாம்பு.. பதறியடித்து வெளியே ஓடிய உடற்கூறு ஆய்வு மருத்துவர்!