India

முத்தம் கொடுத்த மணமகன்.. திருமணத்தையே நிறுத்திக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த மணப்பெண்!

உத்தர பிரதேச மாநிலம், சம்பால் பகுதியைச் சேர்ந்தவர் அக்னிகோத்ரி. வாலிபரான இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்குப் பெற்றோர்கள் திருமண நிச்சயம் செய்திருந்தனர்.

இதன்படி கடந்த 27ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமக்கள் இருவரும் மணக்கோலத்தில் மேடையில் நின்றிருந்தனர். இந்த விழாவில் 300க்கும் மேற்பட்ட உறவினர்கள் அவர்களது நண்பர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், மேடையில் இருந்த மணமகன் திடீரென மணமகளுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து அவர் கூச்சலிட்டுக் கத்தியுள்ளார். பிறகு தனது பெற்றோர்களிடம் இந்த மாப்பிள்ளை வேண்டாம் திருமணத்தை நிறுத்துங்கள் என கூறியுள்ளார்.

இதைக்கேட்ட பெற்றோர்கள் மகளைச் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் சமாதானம் ஆகாமல் காவல்நிலையத்திற்குச் சென்று மணமகன் மீது புகார் கொடுத்துள்ளார். பின்னர் போலிஸாரும் அவரிடம் சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அந்த பெண் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் நடக்க விருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

இது குறித்துப் பேசிய மணமகள், "மேடையிலிருந்தபோது மாப்பிள்ளை என்னை தகாத முறையில் தொட்டார். நான் உடனே தடுத்தேன். ஆனால் அவர் திடீரென முத்தம் கொடுத்ததை நான் அவமானமாகப் பார்க்கிறேன்.

எனது சுயமரியாதை பற்றி கவலைப்படாமல் பல விருந்தினர்கள் முன்னிலையில் இப்படி நடந்து கொண்டது எனக்குப் பிடிக்கவில்லை. எதிர்காலத்தில் அவர் எப்படி நடந்து கொள்வார் என்ற பயம் எனக்கு உள்ளது. அதனால் இந்த திருமணம் வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மணமகன் மறுத்துள்ளார். மணப்பெண்தான் அனைவர் முன்னிலையில் மேடையில் முத்தம் கொடுத்தால் ரூ. 1,500 தருவதாகவும், இல்லை என்றால் ரூ.3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என பந்தயம் கட்டினார். அதனால்தான் நான் இப்படிச் செய்தேன் என அவர் கூறியுள்ளார். இவரின் இந்த குற்றச்சாட்டை மறுத்த மணபெண் 'நான் அப்படி எந்த ஒரு பந்தயமும் கட்டவில்லை' என கூறியுள்ளார்.

இதனால் போலிஸார் இருவரிடத்திலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மகிழ்ச்சியாக முடிய வேண்டிய திருமணம் ஒரு முத்தத்தால் தற்போது காவல்நிலையம் வரை சென்றுவிட்டது உறவினர்களை வேதனையடைய செய்துள்ளது.

Also Read: ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. வந்து விட்டது ஜோம்பி வைரஸ்: மனித குலத்துக்கு பேராபத்தா?