India

Selfie மோகம்.. நீர்வீழ்ச்சியில் பறிபோன 4 சிறுமிகள் உயிர்.. கர்நாடகாவில் சோகம் !

கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் உள்ளது உஜ்வால் நகர். இந்த பகுதியை சேர்ந்த ஆசியா (17). இவர் அங்குள்ள மதரஸாவில் படித்து வருகிறார். அங்கே இவருக்கு அங்கோலைச் சேர்ந்த குத்ஷியா படேல் (20), ருக்சர் பிஸ்டி (20) மற்றும் பெலகாவியில் உள்ள ஜட்பட் காலனியைச் சேர்ந்த தஸ்மியா உள்ளிட்டோர் நண்பர்களாக இருந்தார்கள்.

இந்த நிலையில் நேற்றைய முன்தினம், மதரஸாவில் படிக்கும் சுமார் 40 மாணவர்கள் கர்நாடக - மகாராஷ்டிரா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கிட்வாட் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா மேற்கொண்டனர். அப்போது, இவர்கள் அனைவரும் அங்கு சுற்றி பார்க்க, அதில் மேலே குறிப்பிட்ட 5 சிறுமிகள் மட்டும், நீர்வீழ்ச்சிக்கு அருகே சென்று Selfie எடுக்க முயன்றனர்.

அப்போது அவர்களது கால் வழுக்க, ஒருவர் பின் ஒருவராக 5 பெரும் கால் சறுகி அருகில் இருந்த பள்ளத்தில் இருந்த தண்ணீரில் விழுந்தனர். தண்ணீரில் விழுந்தவர்களுக்கு நீச்சல் தெரியாததால், அவர்கள் தங்களை காப்பாற்றும்படி கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதனைக்கண்ட சக மாணவர்கள், அவர்களை காப்பற்ற முற்பட்டனர்.

ஆனால் அவர்களுக்கு நீச்சல் தெரியாததால், அந்த பகுதிவாசிகளை அழைத்தனர். அவர்கள் உடனே வந்து நீரில் குதித்து மாணவிகளை காப்பற்ற முயன்றனர். அப்போது ஒரு சிறுமியை மட்டும் உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளார்.

மேலும் நீரில் மூழ்கிய மற்ற 4 மாணவிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த நிகழ்வு அந்த பகுதியை பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில், சம்பவம் நிகழ்ந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: ராகிங் விளைவு : இரண்டாவது மாடியில் இருந்து குதித்த மாணவர்.. அசாம் பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி !