India

எரிபொருள் இல்லாமல் பாதி வழியில் நின்ற ஆம்புலன்ஸ்.. நோயாளி உயிரிழப்பு.. ராஜஸ்தானில் பரபரப்பு !

மருத்துவமனைக்கு செல்லும்போது பாதி வழியிலேயே 108 ஆம்புலன்ஸ் எரிபொருள் இல்லாமல் நின்றதால் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற பகுதியை சேர்ந்தவர் தேஜியா. 40 வயதாகும் இவருக்கு, அண்மையில் உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவத்தன்று இவர் மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து பதறி போன இவரது உறவினர்கள் உடனே அரசு 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டுள்ளனர்.

அவர்களும் வந்து இவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது ஆம்புலன்ஸ் டானாபூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென நின்றது. பின்னர் அதில் டீசல் இல்லை என்று தெரியவந்தது. எனவே அவரை அழைத்துச்செல்ல மற்றொரு ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டனர்.

பின்னர் வேறொரு ஆம்புலன்ஸ் வந்த பிறகு, அவரை அதில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அங்கு தேஜியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், கொஞ்ச நேரம் முன் வந்தால் காப்பாற்றியிருக்கலாம் எனவும் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ந்த உறவினர், அந்த இடத்தில் வைத்தே கதறி அழுதனர்.

இதைத்தொடர்ந்து இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து காவல்துறை அதிகாரிகள் மருத்துவ நிர்வாகிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த நிகழ்வு குறித்து பன்ஸ்வாரா தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி கூறுகையில், " இந்த சம்பவம் குறித்து புகார் எதுவும் வரவில்லை. இருப்பினும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மருத்துவமனைக்கு செல்லும்போது பாதி வழியிலேயே 108 ஆம்புலன்ஸ் எரிபொருள் இல்லாமல் நின்றதால் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.