India

“தலைமை தேர்தல் ஆணையர் அடிபணியாமல் இருக்க வேண்டும்” : ஒன்றிய பாஜக அரசை மறைமுகமாக சாடிய உச்ச நீதிமன்றம்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையரை நியமிக்க தற்போது கடைபிடிக்கப்படும் நடைமுறையில் மாற்றம் செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு, நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருதா போஸ், ரிஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டியது கட்டாயம் என அரசியல் சாசனத்தின் 324(2) பிரிவு கூறியுள்ளது.

ஆனால் அரசியல் சாசனம் அமலுக்கு வந்து 70 ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஒன்றிய ஆட்சியாளர்களும் தங்கள் விரும்பும் நபரையே பதவியில் அமர்ந்துக்கின்றனர். எனவே தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக சட்டம் இயற்றவேண்டும்.

மேலும் டி.என்.சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்தபோது யாருடைய அழுத்தத்துக்கும் பணியாமல் தன்னிச்சையாக செயல்பட்டார். பல்வேறுசீர்திருத்தங்களை துணிச்சலாக மேற்கொண்டார். இதுபோன்றவர்களைத்தான் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்க வேண்டும்.

தலைமை தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராகவும் யாருடைய அழுத்தத்துக்கும் அடிபணியாமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் வலிமை பெற்றவராகவும் இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Also Read: “இது நாட்டிற்கே கேடு விளைவிக்கும்..” - தலைமை நீதிபதி இருந்த மேடையில் எச்சரிக்கை விடுத்த மம்தா பானர்ஜி !