India

பரோலில் வந்து மனைவியை கொலை செய்த ரவுடி.. 9 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய பின்னணி என்ன? புதுவையில் அதிர்ச்சி!

சாலை போட ரோடு தோண்டினால் மாறிவிடுவோம் என பயந்து, தனது மனைவியை கொன்று புதைக்கப்பட்ட இடத்தில் எலும்புகளை தோண்டியெடுத்த பிரபல ரெளடியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர். அந்த பகுதியில் பிரபல ரெளடியாக இருக்கும் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்று தற்போது வெளியில் உலாவி கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இவரது நண்பர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு இரவு நேரத்தில், உழந்தை ஏரிக்கரையில் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு குழி தோண்டியுள்ளனர். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அனிதா நகரைச் சேர்ந்த வேல்முருகன், சரவணன், சக்தி நகரைச் சேர்ந்த மனோகர் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு ரெளடி பாஸ்கர் தனது மனைவியை கொன்று இதனுள் புதைத்து விட்டதாகவும், தற்போது அதன் எலும்புகளை எடுக்க தாங்கள் வந்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

அதன்பேரில், ரெளடி பாஸ்கரை இரவோடு இரவாக காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அப்போது அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், தனது மனைவியை ஏன், எவ்வாறு கொலை செய்து புதைத்தார் என்பது குறித்த தகவல்கள் தெரியவந்தது.

அதாவது இவருக்கும் எழிலரசி என்பவருக்கும் கடந்த 1998-ல் திருமணம் நடந்துள்ளது. தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு பெரியார் நகரைச் சேர்ந்த செல்வம் என்பவரைக் கொலைசெய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறை சென்றார்.

அப்போது உள்ளே இருந்தபடியே பிரபல தொழிலதிபர்களை மிரட்டி பணம் வசூலிப்பது உள்ளிட்ட ரெளடி தனத்தை, இவரது நண்பர் செந்தில் என்பவர் மூலம் செய்து வந்துள்ளார். அப்போது செந்திலுக்கும், பாஸ்கரின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இவர்களது இந்த பழக்கம் சிறைக்குள் இருக்கும் பாஸ்கருக்கு தெரியவரவே, அதிரப்பட்ட அவர், தனது மனைவியை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 2015-ல் ஜாமீன் பெற்று வந்த இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் அழைத்து சென்ற மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் உழந்தை ஏரிக்கரையில் புதைத்துள்ளார். புதைக்கப்பட்ட உடல் உடனே மக்க வேண்டும் என்பதற்காக 'யூரியா'வை பயன்படுத்தியுள்ளார்.

arrested persons

எழிலரசியை பற்றி அவரது குடும்பத்தினர் கேட்கையில், அவரை பற்றி கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அவர்களும் இது குறித்து புகார் செய்யவில்லை. இதையடுத்து சிறைக்கு சென்ற அவர், கடந்த 2015-ல் நன்னடத்தை காரணமாக வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில் அண்மையில் இந்த எரிக்கரையில் சுற்று சுவர் எழுப்பப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எங்கே தான் மாட்டிக்கொள்வேனோ என்று பயந்து அவரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து அதனை தோண்டி எடுத்துள்ளனர். மேலும் கிடைக்கப்பெற்ற சேலையையும் எரித்து, எலும்புத்துண்டுகளையும் எடுத்து ஏரியில் வீசியெறிந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து அந்த எலும்புத்துண்டுகளை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சிசுவின் உடலை கவ்விக்கொண்டு ஓடிய நாய்.. பதறிய பொதுமக்கள்.. ராஜஸ்தான் மாநில அரசு மருத்துவமனையின் அவலம் !