India

வரதட்சணை கொடுமை : 6 மாத கர்ப்பிணி பெண்ணை கொன்று புதைத்த கணவர்.. பாஜக ஆளும் மாநிலத்தில் அவலம் !

கர்நாடக மாநிலம் கங்ககொண்டனஹல்லி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 25). இவருக்கும் ஐகூர் என்ற அண்டை கிராமத்தை சேர்ந்தவார் ராஷ்மி என்கிற சந்திரகலாவுக்கும் (வயது 20) கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ராஷ்மியின் தந்தை பால் வியாபாரம் செய்து வரும் ஏழைமை நிலையில் இருந்தாலும் தனது இரண்டாவது மகளுக்கு தன்னால் முடிந்த வரை வரதட்சணை கொடுத்து நல்லபடியாக திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்து சில நாட்களிலே மீண்டும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். இதனிடையே ராஷ்மி கர்ப்பமாகியுள்ளார்.

அப்போதும் பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணை கொண்டு வரும்படி துன்புறுத்தியுள்ளார். மேலும் இரண்டு முறை பெண்ணை, அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அந்த சமயத்தில் பெண் வீட்டார் சமரசம் பேசி மீண்டும் ராஷ்மியை சேர்த்து வைத்தனர்.

இந்த நிலையில், ராஷ்மி கர்ப்பமாக இருப்பதை அறிந்துகூட அவருக்கு சரியாக உணவு வழங்காமல், வேலை செய்ய சொல்லி மாமனார், மாமியார், கணவர் என குடும்பமே கொடுமை படுத்தியுள்ளனர். இப்படி இருக்கையில் இது குறித்து தனது சகோதரிக்கு போனில் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும் அவரும் இவரை சமாதானம் செய்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இவர்களுக்குள் கடும் மோதல் போக்கு இருந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவர், மனைவியை கொன்றுள்ளார். மேலும் அவரது உடலை தோட்டத்தில் புதைத்துள்ளார். பின்னர் மனைவி வீட்டை தொடர்பு கொண்டு, அவரை காணவில்லை என்றும், நான் தேட மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இருப்பினும் தனது மகள் குறித்து காவல் நிலைத்தில் தந்தை புகார் அளிக்காத நிலையில், தங்கள் வீட்டில் இருந்து ரூ.4 ஆயிரம் எடுத்துக்கொண்டு மனைவி ஓடிவிட்டதாக கணவர் தரப்பில் இருந்து குற்றம்சாட்டப்பட்டது. இதனால் கோபமடைந்த பெண்ணின் குடும்பத்தார், தங்கள் மகளை காணவில்லை என்றும், இது குறித்து தங்கள் மருமகன் மீது சந்தேகம் உள்ளது என்றும் புகார் அளித்தனர்.

புகாரையடுத்து விசாரிக்க போலீசார் வருகை தந்தபோது, கணவர் மோகன் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து தங்கள் மகனை காப்பற்ற எண்ணிய பெற்றோர், அதற்காக முன் ஜாமீனுக்கு ரெடி செய்தனர். அப்போது அதற்கு கையெழுத்து போட வந்த மோகனை மறைந்திருந்த காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் தொடர் விசாரணை நடத்தினர். அப்போது தான்தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து கொலை செய்து புதைத்த இடத்தை காட்டியபோது, அதனை அதிகாரிகள் தோண்டினர். அப்போது அதனுள் இருந்து பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. பின்னர் அதனை உடற்கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 50 ஜிபி டேட்டா இலவசமுனு லிங்க் வந்தா நம்பாதீங்க.. FIFA கால்பந்து தொடரை வைத்து நடக்கும் மோசடி!