India

உ.பி : HIV நோய் பாதித்த கர்ப்பிணி பெண்ணை தொட மறுத்த அரசு மருத்துவர்கள்.. குழந்தை இறந்த அவலம் !

HIV நோய் பாதித்த கர்ப்பிணி பெண்ணை பிரசவத்தின் போது மருத்துவர்கள் தொட மறுத்ததால், பிறந்த குழந்தை இறந்துள்ளது உத்தரப் பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில் வசித்து வருபவர் 20 வயது இளம்பெண். இவருக்கு சமீபத்தில் திருமணமாகி கர்ப்பமாக இருந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, சமீபத்தில் AIDS நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவர் தேசிய எய்ட்ஸ் தடுப்பு அமைப்பின் (NACO) தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

தற்போது பிரசவ நேரம் என்பதால், இவர் அவரது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். எனவே NACO அமைப்பு பிரசவ வலி ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்று அவரது குடும்பத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதன்பேரில் சம்பவத்தன்று இந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

உடனே இவரும் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளார். ஆனால் அங்கே முன்பணமாக ரூ.20,000 கட்ட கூறியுள்ளனர். அப்போது பெண்ணின் குடுப்பதாரிடம் பணம் இல்லை என்பதால் அவரை பிரோசாபாத் அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர். அங்கே இவருக்கு HIV நோய் இருப்பதை அறிந்த மருத்துவர்கள் இவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர்.

மேலும் செவிலியர்கள் ஊழியர்கள் உட்பட அவரை நெருங்கவே பயந்து இருந்துள்ளனர். நேரமாக இவருக்கோ பிரசவ வலி அதிகமாகியுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் படுக்கையில் பெண் பிரசவ வலியில் சுமார் 6 மணிநேரம் துடித்துள்ளார். யாரும் கண்டுகொள்ளாத நிலையில், இரவு 9 மணி அளவில் சிசு பிரசவித்துள்ளது.

ஆனால் பிரசவித்த குழந்தை சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து இந்த நிகழ்வு குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை NACO அமைப்பில் கண்ணீருடன் புகார் தெரிவித்தார்.

இவரது புகாரின்பேரில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க NACO அமைப்பும் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மருத்துவ அலுவலர் உறுதியளித்துள்ளார்.

HIV நோய் பாதித்த கர்ப்பிணி பெண்ணை பிரசவத்தின் போது மருத்துவர்கள் தொட மறுத்ததால், பிறந்த குழந்தை இறந்துள்ளது உத்தரப் பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பியதால் ஆத்திரம்.. குடும்பத்தையே கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த இளைஞர் !