India

திருமணமான பெண்ணை சந்திக்க வந்த முன்னாள் காதலன் கொலை.. கர்ப்பிணி உட்பட 4 பேர் கைது - பீகாரில் அதிர்ச்சி !

திருமணமான காதலியை முன்னாள் காதலன் சந்தித்ததால், பெண்ணின் குடும்பத்தார் அவரை அடித்து கொன்றுள்ள சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரூபி தேவி. இவரும் அதே பகுதியை சேர்ந்த சந்தன் திவாரி என்பவரும் சில வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிய வர, அவர்கள் காதலுக்கு சம்மதிக்கவில்லை. மாறாக ரூபிக்கும் ராஜு பஸ்வான் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தற்போது ரூபிக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கும் நிலையில், மீண்டும் கர்ப்பமுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த நிலையில் காதலன் திவாரி, தனது காதலியை அடிக்கடி சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. மாறாக காதலி அவரை சந்திக்காமல் தவிர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ரூபியின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த திவாரி, காதலி ரூபியிடம் பேசியுள்ளார். இருவருக்கும் இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென வீட்டிற்கு வந்த ரூபியின் கணவர், இதை கண்டதும் அதிர்ச்சியடைந்தார். அவருக்கு என்ன நடக்கிறது என்பது புரிவதற்குள், தனது முன்னாள் காதலன் தன்னை தொந்தரவு செய்வதாக கூறியுள்ளார்.

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ராஜு, அவரது தந்தை வீர் பகதூர் ஆகியோர் சேர்ந்து திவாரியை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த திவாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து இது குறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். பின்னர் திவாரியின் உடலை மீட்டு உடற்கூறைவுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரூபியின் கணவர், மாமனார், மற்றும் ரூபி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஷாபூரைச் சேர்ந்த சந்தன் திவாரி, தனது முன்னாள் காதலி ரூபி தேவியை சந்திக்க வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து சந்தன் திவாரியை கொலை செய்தனர்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ரூபி தேவி, அவரது கணவர் ராஜூ பஸ்வான், அவரது தந்தை வீர் பகதூர் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளோம். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட கர்ப்பிணி ரூபி தேவிக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை இருப்பதால், அந்த குழந்தையுடன் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளோம்" என்றார்.

திருமணமான காதலியை முன்னாள் காதலன் சந்தித்ததால், கர்ப்பிணி பெண் உள்ளிட்ட அவரது குடும்பத்தார் சேர்ந்து அவரை அடித்து கொன்றுள்ள சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 4 வயது குழந்தை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு.. தந்தையின் பிசினஸ் பார்ட்னரை கைது செய்த கேரள போலிஸ் !