India

4 வயது குழந்தை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு.. தந்தையின் பிசினஸ் பார்ட்னரை கைது செய்த கேரள போலிஸ் !

4 வயது குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தையின் தொழில் கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடி பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவருக்கு அண்மையில் திருமணமாகி அனிலா என்ற மனைவியும், 4 வயதில் ஆதிதேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் ஜெயபிரகாஷும் அவரது பக்கத்து வீட்டுக்காரரான ஜிதேஷ் என்பவரும் கூட்டாக சேர்ந்து தொழில் செய்து வந்தனர்.

நன்றாக சென்றுகொண்டிருந்த இவர்களது தொழில் கூட்டணியில் திடீரென ஒரு நாள் விரிசல் விழ தொடங்கியுள்ளது. இவர்களுக்குள் தொழில் சார்ந்த பண பிரச்னை வர தொடங்கியுள்ளது. இது நாளடைவில் பெரிதாக உருமாறியதால், ஜிதேஷ், ஜெயபிரகாஷ் மீது மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார். இந்த கோபத்தில் ஜெயபிரகாஷை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று பல நாட்களாக எண்ணியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று ஜெய்பிரகாஷின் மனைவி அணிலா, தனது 4 வயது குழந்தையை அழைத்துக்கொண்டு அங்கன்வாடிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த மர்ம கும்பல்கள் சில ஆயுதங்கள் கொண்டு அவர்களை தாக்கினர். இதில் குழந்தையை காப்பாற்ற எண்ணிய தாயை அந்த கும்பல் பலமாக தாக்கினர்.

இந்த தாக்குதலில் குழந்தையின் தலை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் கண்டு மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் தாய்க்கும் முதலுதவி அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜெயபிரகாஷ் காவல்துறையில் இது குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றசாட்டை அடுத்து ஜெய்பிரகாஷின் பிசினஸ் பார்ட்னரான ஜிதேஷை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மகாராஷ்டிரா : டியூசனுக்கு படிக்க வந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.. ஆசிரியர் நடவடிக்கையால் அதிர்ச்சி !