India

திருட்டு வழக்கில் சிக்கிய ஒன்றிய அமைச்சர்.. 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சராக இருப்பவர் நிசித் பிரமானிக். இவர்தான் அமைச்சரவையில் உள்ளவர்களிலேயே இளமையானவர் என பா.ஜ.கவினர் புகழ்ந்தனர். இந்நிலையில் 2009ம் ஆண்டு நகைக்கடையில் நடந்த திருட்டு வழக்கு ஒன்றில் மேற்குவங்க நீதிமன்றம் ஒன்றிய இணை அமைச்சர் நிசித் பிரமானிக் கைது வாரண்ட் பிறப்பித்துள்ள பா.ஜ.க கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அலிபுர்தார் ரயில் நிலையம் மற்றும் பீர்பாரா பகுதியில் உள்ள நகைக்கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு அலிபுர்துவாலில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள ஒன்றிய இணை அமைச்சர் நிசித் பிரமானிக் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது நீதிமன்றம். திரிணாமுல் கட்சியிலிருந்த போது நிசித் பிரமானிக் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.

இதையடுத்து நிசித் பிரமானிக் கடந்த 2019ம் ஆண்டு பா.ஜ.க கட்சியில் சேர்ந்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இந்நிலையில்தான் 13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திருட்டு வழக்கில் ஒன்றிய அமைச்சர் நிசித் பிரமானிக் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதாகப் பலரும் கூறிவந்த நிலையில் நிசித் பிரமானிக் மீதான கைது வாரண்ட் அதை நிரூபிக்கும் விதமாகவே உள்ளது.

Also Read: வங்கியில் பணம் எடுப்பவரா நீங்கள்.. அப்ப இன்றே எடுத்துடுங்க: வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!