India

காட்டில் மயங்கி விழுந்து உயிருக்குப் போராடிய நபர்.. குரைத்து உரிமையாளரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்!

வீட்டில் பலரும் நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிகமாக வீடுகளில் நாய் வளர்க்கப்படுகிறது. இதற்குக் காரணம் நாய் நன்றியுடனும், நல்ல துணையாகவும் இருக்கும்.

வீட்டிற்கு இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வந்தால் நாய் குறைத்து உரிமையாளருக்குக் காட்டிக் கொடுக்கும். ஏன் வீட்டிற்குள் புகுந்த பாம்புகளைக் கடித்து தனது உரிமையாளர் உயிரைக் காப்பாற்றியது நாய் என்ற செய்தியை நாம் பார்த்துப் படித்திருப்போம். அந்த அளவிற்கு நாய் நன்றியுடன் இருக்கும்.

நகர பகுதிகளில் தங்களின் பாதுகாப்பிற்கு நாய் வளர்க்கப்பட்டால், கிராமங்களில் காட்டு வேலைக்குச் செல்பவர்களின் பாதுகாப்பிற்காக நாய்கள் வளர்க்கப்படுகிறது. எங்குச் சென்றாலும் அவர்களுடன் நாயும் பாதுகாப்பாகச் சென்று உதவியாக இருக்கும். இந்நிலையில் நடுக்காட்டில் தொலைந்த உரிமையாளரை வளர்ப்பு நாய் காப்பாற்ற உதவிய சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்திற்குட்பட்ட சுதுரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேகரப்பா. இவர் டாமி என்ற நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். மேலும் ஷேகரப்பாக தினமும் காலையில் கிராமம் அருகே உள்ள காட்டிற்குச் சென்று விறகு எடுத்து வருவது வழக்கம்.

அதன்படி அவர் கடந்த நவம்பர் 12ம் தேதி வழக்கம்போல் விறகு எடுப்பதற்காகக் காட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்குத் திரும்ப வில்லை. இதனால் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து உரிமையாளர் வீட்டிற்கு வராததை உணர்ந்த நாய் டாமி அவரை தேடி காட்டிற்குச் சென்றுள்ளது. பிறகு அங்குக் காட்டில் மயங்கிக் கிடந்த ஷேகரப்பாவை கண்டுபிடித்து நாய் குரைத்துள்ளது. நாயின் சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக் கொண்டு சென்றனர்.

பிறகு மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு ஷேகரப்பா கண் விழுந்துள்ளார். மேலும் காட்டில் அதிக வெப்பம் இருந்த காரணத்தாலேயே அவர் மயக்கம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காட்டில் மயங்கிய உரிமையாளரை வளர்ப்பு நாய் காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Also Read: திருமணம் செய்வதாகக் கூறி நடிகை பூர்ணாவை கடத்த முயன்ற வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு என்ன ?