India

“அம்புட்டும் பொய்..” -ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த வழக்கில் புதிய திருப்பம்: உண்மையால் அதிர்ச்சி

காதலனுக்கு கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மா, முன்னதாக கொடுத்த வாக்குமூலம் பொய் என்பதை அவரே மீண்டும் வாக்குமூலமாக அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு - கேரள எல்லையில் உள்ள பாறசாலை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த இவருக்கும் கிரீஷ்மா என்ற மற்றொரு கல்லூரியில் படித்து வந்த இளம்பெண்ணுக்கும் பேருந்தில் ஏறபட்ட பழக்கம் மூலம் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஷாரோன் ராஜ் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து தனது மகன் இறப்பிற்கு அவரை காதலித்து வந்த பெண்தான் காரணம் என கூறி ஷாரோன் ராஜின் பெற்றோர்கள் பாறசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலிஸார் காதலி களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன் சிறைப்பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதன்படி கிரீஷ்மாவின் பெற்றோர்கள் அவருக்கு ஜாதகம் பார்த்துள்ளனர். அப்போது அவரது ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் ஒருவர், 'பெண்ணின் முதல் கணவன் உயிரிழந்து விடுவார். இரண்டாவது கணவருடன் மட்டும் தான் அவரால் வாழ முடியும்' என கூறியுள்ளார். இதை கிரீஷ்மாவும் அவரது குடும்பத்தினரும் நம்பியுள்ளனர்.

மேலும் கிரிஷ்மா இளைஞர் ஒருவரை காதலித்து வருவதை அறிந்த பெற்றோர், ஜோதிடர் கூறியதை அடுத்த தனது காதலனை கொல்ல குடும்பத்துடன் சேர்ந்து திட்டம் போட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று ஷாரோன் ராஜை திருமணம் செய்துகொண்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அவருக்கு மாமனார் வீட்டில் கஷாயம் ஒன்று கொடுக்கப்பட்டது.

பின்னர் அது விஷம் என அறியாமல் குடித்த இளைஞர் உயிரிழந்தார் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரிக்கையில் காவல்துறையிடம் சிக்காமல் எப்படி கொலை செய்வது என்று கூகுளில் தேடி பார்த்ததாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது அவரிடம் காவல்துறையினர் துருவி துருவி விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்பு கூறிய ஜாதகம் விஷயம் அனைத்தும் பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும் தனக்கு பார்த்த மாப்பிள்ளை மிகவும் பணக்காரர் என்றும், அவரை கிரீஷ்மா திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதும் தெரியவந்தது.

மேலும் தனது பெற்றோர் தனக்கு திருமணம் ஏற்பாடு செய்தது குறித்து தனது காதலனிடம் கிரீஷ்மா கூறுகையில், அவரை உடனே அழைத்து கொண்டு சர்ச் ஒன்றில் வைத்து திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் வேறு வழியின்றி அவரை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தனது காதலனையே கொலை செய்த காதலியின் செயல் தற்போது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இந்த வழக்குதொடர்பாக கைது செய்யப்பட்ட கிரீஷ்மாவை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று எப்படி கொலை செய்தார் என்பதை செய்துகாட்டும்படி காவல்துறையினர் கூறியுள்ளனர். அப்போது கிரீஷ்மா மீது யாரேனும் தாக்குதல் நடத்திவிடக்கூடாது என்பதற்காக பலத்த போலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது அவரது வீட்டிற்கு சென்றபோது, தான் படிக்கும்போது விளையாட்டு, படிப்பு என்று பலவற்றிலும் வென்ற ட்ராபிகளை கையிலெடுத்து பார்த்து கதறி அழுதுள்ளார். மேலும் 'தப்பு செய்து விட்டேனே.." என்றும் கதறியுள்ளார்.

மேலும் தான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என்று கூறி அழுது புரண்டுள்ளார். பின்னர் தான் தனது காதலனுக்கு விஷம் கொடுத்தது எப்படி என்பது போன்று நடித்தும் காட்டினார். இதையடுத்து அவரை காவல்துறையினர் மீண்டும் சிறைக்கு அழைத்துசென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "10 வருடங்களுக்கு பின்னும் அதே தான்.." - உதயநிதிக்கு Option கொடுத்த கிருத்திகா.. கலகல ட்வீட் VIRAL !