India

பெற்றோர்களே உஷார்! -2 மாத குழந்தையை கடத்தி நரபலி கொடுக்க முயன்ற இளம்பெண்: காரணத்தை கேட்டு அதிர்ந்த போலிஸ்

தன்னை பெற்ற தந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க 2 மாத கைக்குழந்தையை கடத்தி நரபலி கொடுக்க முயன்ற இளம்பெண்ணின் செயல் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள கிழக்கு கைலாஷ் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா. இவர் தந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது தந்தை கடந்த அக்டோபர் மாதம் திடீரென உயிரிழந்தார். தந்தையின் பிரிவை தாங்க முடியாத ஸ்வேதா, தந்தை தனக்கு உயிருடன் மீண்டும் வர வேண்டும் என்றே எண்ணியுள்ளார்.

இதனிடையே இவருக்கு மர்ம நபர் ஒருவர், தந்தை மீண்டும் உயிருடன் வரவேண்டுமென்றால், இறந்தவர் எந்த பாலினத்தை சேர்ந்தவரோ, அதே பாலினத்தை சேர்ந்த கை குழந்தையை பலி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது பேச்சை கேட்ட இளம்பெண், அதற்காக பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளார்.

அப்போது கடந்த 3 நாட்களுக்கு முன்பு டெல்லியிலுள்ள கார்கி என்ற பகுதியை சேர்ந்த தம்பதியின் இரண்டு மாத குழந்தையை பார்த்துள்ளார். அப்போது அவர்களிடம் ஸ்வேதா நேக்காக பேச்சுக்கொடுத்துள்ளார். மேலும் தான் குழந்தைக்கு மருந்து ஊட்டச்சத்து உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்குவதாக கூறியதால், அதனை நம்பிய அந்த குடும்பத்தினர், தங்களது முகவரியை இந்த பெண்ணிடம் கொடுத்துள்ளனர்.

பின்னர் மறுநாள் வீட்டிற்கு வந்த ஸ்வேதா, குழந்தையை பார்த்து, தன்னுடன் அனுப்பி வைக்கமாறு கேட்டுள்ளார். அதற்கு தயங்கிய அவர்களிடம், வேண்டுமென்றால் குழந்தையின் தாயும் வரலாம், என்று கூற பின்னர் குழந்தை, அதன் தாய் ரீது மற்றும் ஸ்வேதா ஆகியோர் காரின் சென்றுள்ளனர்.

அப்போது குழந்தையின் தாய்க்கு மயக்கமருந்து கொடுத்த குளிர்பானத்தை கொடுத்து மயக்கமடைய செய்த ஸ்வேதா, அவரை உத்தரபிரதேசத்தில் இறக்கி விட்டு குழந்தையை கடத்தி சென்றுள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து ரீது பார்க்கையில், தனது குழந்தை கடத்தப்பட்டதை உணர்ந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தனது குடும்பத்திற்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து புகாரளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், கடத்தப்பட்ட குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சிசிடிவியை ஆய்வு செய்ததில் அவரது கார் நம்பர் கிடைத்துள்ளது. அதை வைத்து விசாரணையை தொடங்கிய அதிகாரிகள் கடத்தப்பட்ட 24 மணி நேரத்திலேயே குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் சுவேதாவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது தந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க குழந்தையை நரபலி கொடுக்க கடத்தியதாக ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். தனது தந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க 2 மாத கைக்குழந்தையை கடத்தி நரபலி கொடுக்க முயன்ற இளம்பெண்ணின் செயல் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நடுவானில் மோதிக்கொண்ட இரண்டு விமானங்கள்: வெடித்து சிதறியதால் 6 பேர் பலி? சோகத்தில் முடிந்த சாகசம் |VIDEO