India

ஜூஸுக்கு முன்னாடி HORLICKS.. கணவனுக்கு விஷம் கலந்து கொடுத்த மனைவி.. கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி !

கணவனை கொல்ல மனைவி ஹார்லிக்ஸில் விஷம் கலந்து கொடுத்துள்ள சம்பவம் கேரளாவில் தற்போது மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள பாறசாலையில் அமைந்துள்ளது முறியங்கரை என்ற கிராமம். அந்த பகுதியில் வசித்து வருபவர் சுதிர் (வயது 49). கேரளா அரசுப் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற தமிழ்நாட்டை சேர்ந்த மனைவி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு சாந்திக்கும், முருகன் என்பவருக்கும் இரகசிய உறவு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்போது, சுதிர் வீட்டில் சாப்பிடும்போதெல்லாம் ஏதாவது உடல்நலக்கோளாறு ஏற்பட்டு வந்துள்ளது. அதிலும் தலைவலி அதிகமாக காணப்பட்டு வந்துள்ளது. இதனால் சுதிர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அப்படி ஒருநாள் தான், மனைவி கொடுத்த ஹார்லிக்ஸை சுதிர் குடித்துள்ளார். அப்போது அவரது உடல்நலம் மிகுந்த மோசமான நிலையில் இருந்துள்ளது. மேலும் தலைவலியும் அதிகமாக காணப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

அங்கே இவருக்கு சுமார் 3 நாட்கள் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலை சரியாகியுள்ளது. கணவனுக்கு உடல்நலம் குணமான பிறகு கணவன் மனைவிக்குள் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த மனைவி சாந்தி, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். பிறகு வீட்டில் தனியாக இருந்த சுதிர், கடை உணவை உண்டு வந்துள்ளார். அப்போது அவரது உடல்நலத்தில் எந்த வித கோளாறும் காணப்படவில்லை. மேலும் மனைவி சென்ற சில மாதங்களில் வீட்டிற்கு வரவில்லை என ஆத்திரத்தில், சாந்தியின் உடைகளை தூக்கி ஏறிவதற்காக அவரது பீரோவில் இருந்து எடுத்துள்ளார்.

அப்போது அதில் துணிகளுக்கு இடையே அலுமினியம் பாஸ்பைட் விஷம் மற்றும் ஒரு சிரிஞ்ச் இருந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து தான் மருத்துவமனையில் இருந்து பெற்ற தனது ரிப்போர்ட்டை எடுத்து பார்க்கையில் அவரது உடலில் அலுமினியம் பாஸ்பைட் கலந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த சுதிர், தனது மனைவி தான் தன்னை கொள்வதற்கு ஸ்லோ பாய்சன் கொடுத்துள்ளார் என்பதை கண்டறிந்தார்.

இதையடுத்து மனைவியை தற்போது சுதிர் பிரிந்து வாழ்ந்து வருகிறார். பின்னர் இது குறித்து தக்க ஆதாரங்களுடன் தனது மனைவி மற்றும் அவரது காதலன் மீது காவல்துறையில் புகார் கொடுத்ததாகவும், ஆனால் அவர்கள் அந்த வழக்கை தீவிரமாக மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதே பாறசாலை பகுதியில் அண்மையில் ஜூஸில் விஷம் கலந்து காதலியே காதலனை கொன்றுள்ள சம்பவம் வெளிவந்த நிலையில், சுதிர் தற்போது மனைவி மீது மீண்டும் புகார் தெரிவித்துள்ளார். மேலும் தனது மனைவிக்கு கொரியர் மூலம் இந்த விஷத்தை அவரது காதலன் முருகன் தான் அனுப்பிவைத்துள்ளார் என்பதற்கான ஆதாரத்தையும் அளித்துள்ளார் சுதிர்.

இதையடுத்து தற்போது இந்த வழக்கு குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனை கொல்ல ஹார்லிக்ஸில் விஷத்தை கலந்து மனைவி கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: திட்டிய ஆசிரியர்.. 14வது மாடியிலிருந்து குதித்த 10ம் வகுப்பு மாணவன்: பெங்களூருவில் பதறவைக்கும் சம்பவம்!