India

மருமகனுக்கு ஆசை ஆசையாக கொடுத்த காரால் பறிபோன மாமியாரின் உயிர்.. வரதட்சணையால் நேர்ந்த சோகம் !

வருங்கால மருமகனுக்கு ஆசை ஆசையாக வரதட்சணையாக கொடுத்த காரை ஓட்டி பார்க்கையில் மாமியார் உயிரிழந்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை அடுத்துள்ள அக்பர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் குமார் (வயது 24). ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வரும் இவருக்கும் ஒளரையா என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் திருமணம் அடுத்த வாரம் நடைபெறவிருந்த நிலையில், வழக்கமாக அங்கு நடக்கும் திருமணத்திற்கு முன்பு சடங்குகள் நடைபெற்றது. அதன்படி சம்பவத்தன்று 'திலகம் இடுதல்' சடங்கு நடைபெற்றது. அப்போது பெண் வீட்டார் அருண் குமாருக்கு கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளனர்.

இதனைக்கண்டதும் ஆனந்த அதிர்ச்சியில் இருந்த அருண் குமார், கார் சாவியை வாங்கியுள்ளார். பின்னர் அவரை கார் ஓட்டிப்பார்க்கும்படி பெண் வீட்டார் கூறியுள்ளனர். அப்போது தனக்கு கார் ஓட்ட தெரியாது என்று கூறி மறுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அருணை கார் ஓட்டி பார்க்கும்படி வற்புறுத்தியுள்ளனர். ''

மாமனார் வீட்டாரின் பேச்சை தட்டமுடியாத அருண்குமார், அந்த காரை ஓட்டி பார்த்துள்ளார். அப்போது காரை பின்னால் இயக்கும் போது பிரக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியுள்ளார். இதனால் காரின் பின்னல் நின்ற உறவினர்கள் சிலர் மீது கார் மோதியுள்ளது.

இந்த விபத்தில் அருணுக்கு மாமியாராக வரவிருந்த சரளா தேவி (வயது 35) என்பவர் மீது கார் ஏறியதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். மேலும் சிறுமி உட்பட சிலருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இது குறித்து காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், இறந்துபோன சரளாவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். அதோடு படுகாயமடைந்தவர்களையும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் புதுமாப்பிள்ளை அருண் மீது கவனக்குறைவு, அவசரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் மரணத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

வருங்கால மருமகனுக்கு ஆசை ஆசையாக வரதட்சணையாக கொடுத்த காரை ஓட்டி பார்க்கையில் மாமியார் உயிரிழந்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நடுரோட்டில் அடிதடி சண்டை.. அதி வேகமாக வந்த கார் மோதியதில் 70 வயது மூதாட்டி உட்பட 4 பேர் பலி !