India

ஆந்திரா : பெற்ற மகளை கொடூரமாக கொன்ற தந்தை... கொலைக்கான காரணத்தை அவரே வீடியோவாக வெளியிட்ட பகீர் சம்பவம் !

காதலித்ததற்காக 10-ம் வகுப்பு படிக்கும் மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொன்று விடியோவும் வெளியிட்டுள்ள சம்விதம் ஆந்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் வரப்பிரசாத். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்த இருமகள்கள் மீதும் தந்தை பாசமாக இருந்து வந்துள்ளார். மேலும் அவர்களிடம் கொஞ்சம் கடுமையாகவும் இருந்துவந்துள்ளார். இந்த நிலையில் அவரது மூத்த மகள் இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். இவர்கள் காதல் விவாகரத்திற்கு தந்தை சம்மதிக்கவில்லை என்பதால் சமீபத்தில் காதலனுடன் வீட்டை விட்டு சென்றுள்ளார்.

இதனால் மிகவும் மனம் நொந்து போயிருந்த தந்தை, தனது இரண்டாவது மகளையாவது பத்திரமாக வளர்க்க வேண்டும் என்று எண்ணியுள்ளார். அவரது இரண்டாவது மகள் லிகிதா ஸ்ரீ, தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் சுமாராக படித்து வரும் இவர், இளைஞர் ஒருவரை காதலிப்பதாக தந்தைக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து மகளிடம் பேசிய தந்தை, காதலை விட்டு விடுமாறு கேட்டுள்ளார். இருப்பினும் லிகிதா காதலை விடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிரமடைந்த தந்தை அவரது மகளை கண்டித்துள்ளார். ஏற்கனவே மனைவி, மூத்த மகள் ஆகியோரால் மனம் உளைச்சலில் இருந்த தந்தை, இரண்டாவது மகளும் இப்படி இருக்கிறார் என்று எண்ணி அவரை கொல்ல நினைத்துள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று அவரது மகளை அடித்து துன்புறுத்தி கழுத்தை நெரித்துள்ளார். இதில் மூச்சுத்திணறி லிகிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகள் இறந்தபின், தந்தை தான் தான் மகளை கொன்றதாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் லிகிதாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததோடு, தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருக்கும் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிகழ்வு ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சாலையில் நடந்து கொண்டிருந்த இளம்பெண் மீது மோதிய கிரேன்.. வெளியான சிசிடிவி-யால் பரபரப்பு !