India

ஆட்டோ மீது மோதிய லாரி.. உடல் நசுங்கி 7 பெண்கள் பலி: வேலை முடித்து வீட்டிற்கு சென்றபோது நடந்த சோகம்!

கர்நாடக மாநிலம் பிடர் மாவட்டத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளி பெண்கள் நேற்று மாலை வேலையை முடித்து விட்டு ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர். இதையடுத்து பிமலஹிடா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தெலுங்கானா மாநிலத்திலிருந்து வந்த லாரி ஒன்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த கேரா விபத்தில் பார்வதி, பிரபாவதி, குண்டம்மா, யாதம்மா, ஜக்கம்மா ஈஸ்வரம்மா, ருக்மணி பாய் ஆகிய 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பின்னர் விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதில் 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடாக உள்ளது.

இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலை முடித்து விட்டு வீட்டிற்குச் சென்ற போது 7 பெண்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சீனாவால் பூமிக்கு ஆபத்து.. பதற்றத்தில் விஞ்ஞானிகள் : விண்வெளியில் நடப்பது என்ன?