India

நூற்றுக்கணக்கானோரை பலிவாங்கிய பால விபத்து.. சம்பவத்தன்று கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாடிய குஜராத் அமைச்சர்!

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலம் 100 ஆண்டுகளுக்குப் பழமையானது. இந்த பாலம் பழுதடைந்ததால் சில மாதங்களுக்கு முன்பு மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் குஜராத் மாநிலத்தின் புத்தாண்டு தினமான கடந்த 26ம் தேதி திறக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு இந்த பாலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்துடன் 500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பாலத்தில் இருந்துள்ளனர். அப்போது திடீரென பாலம் இரண்டாக அறுந்து ஆற்றில் விழுந்துள்ளது. இதில்141 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துயர விபத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் ஆளும் பா.ஜ.க அரசைக் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாகக் குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக இந்த பாலத்தை திறக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாகத் திறத்தால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும் இதுதான் குஜராத் மாடலின் லட்சணம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ்பட்டெல் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் குதுகலமாக கொண்டாடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோவில் அமைச்சரின் வீட்டில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கூடிய நிலையில், அமைச்சர் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இதில் உச்சகட்டமாக இந்த கொண்டாட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் வெடிவெடித்து கொண்டாடியுள்ளனர. மேலும் வானவேடிக்கையும் நடைபெற்றுள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் விமர்சித்து வருகின்றனர். மேலும் சொந்த கட்சியிலேயே அமைச்சருக்கு கண்டனம் எழுந்துள்ளது.

Also Read: அதிமுக ஆட்சியில் வெள்ளத்தில் மிதந்த பகுதிகளில் தற்போது தண்ணீர் தேங்கவில்லை.. புகைப்படம் வெளியிட்ட MLA !