India

The Wire ஆசிரியர்கள் வீட்டில் சோதனை.. செல்போன் - சேலப்டாப் பறிமுதல்: பழிவாங்கப்படும் பத்திரிகையாளர்கள்!

இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பா.ஜ.க ஆட்சிக்கு எதிராகப் பேசும் எதிர்க்கட்சி தலைவர்களைப் புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டி வருகிறது. அதேபோல் பா.ஜ.க ஆட்சியின் அவலங்களையும், ஊழல்களையும், மோசடிகளையும் துணிச்சலுடன் வெளிகொண்டு வரும் பத்திரிகையாளர்கள் பகிரங்கமாக மிரட்டப்படுகிறார்கள்.

இந்நிலையில், The Wire இணையதள பத்திரிகையின் ஆசிரியர்கள் வீட்டில் டெல்லி போலிஸார் சோதனை நடத்தியுள்ளது பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The Wire இணையதளத்தில் பா.ஜ.க ஐடி விங் பொறுப்பாளரான அமித் மால்வியா குறித்து செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் மெட்டா நிறுவனத்தில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பா.ஜ.கவுக்கு எதிரான பதிவுகளை நீக்குவதற்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதையடுத்து மெட்டா நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.

இதையடுத்து பொய் செய்தி வெளியிட்டதாகவும், தனது பெருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி அமித் மால்வியா The Wire இணையதளத்தின் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலிஸார் The Wire இணையதள பத்திரிகையின் ஆசிரியர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் எம்.கே.வேணு, சித்தார்த் பாட்டியா, ஜாஹ்னவி சென் ஆகிய நான்குபேர் வீட்டிலும் நேற்று இரவு சோதனை நடத்தியுள்ளனர். அப்போது செல்போன்கள் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து The Wire இணையதள ஆசிரியர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.க அரசின் ஊழல், மதவெறி திட்டங்களைத் தொடர்ந்து செய்தியாக வெளியிட்டதால், பா.ஜ.க அரசு செய்யும் பழி வாங்கும் நடவடிக்கை என பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: 140 அப்பாவி பொதுமக்களை பலி கொடுத்த பா.ஜ.க அரசு.. அறுந்து தொங்கும் குஜராத் மாடல்: முரசொலி சாடல்!