India

ரசகுல்லாவுக்காக அடித்துக் கொண்ட மணமகன் மற்றும் மணமகள் உறவினர்கள்.. கொலையில் முடிந்த திருமண வீடு!

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம், எத்மத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான். இவரது மகளுக்குத் திருமணம் நடைபெற்றது. அப்போது திருமணத்தின்போது பல்வேறு உணவுகளுடன் ரசகுல்லாவும் பரிமாறப்பட்டுள்ளது.

ஆனால், ரசகுல்லா உணவு சாப்பிட்ட எல்லோருக்கும் கிடைக்கவில்லை. இதனால் மணமகள், மணமகன் வீட்டாருக்கு இடையே முதலில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரு பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த சண்டையில் சன்னி என்ற இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைப் பார்த்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சன்னி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தகராறில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருமண வீடு ரசகுல்லாவால் துக்க வீடாக மாறியது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "போலி Mr Bean-ஐ அனுப்பியதற்கு பழிவாங்கிவிட்டோம்"-ட்விட்டரில் சண்டை போட்ட பாகிஸ்தான் ஜிம்பாப்பே தலைவர்கள்!