India

தந்தையுடன் பைக்கில் சென்ற சிறுவன்.. பட்டத்தின் மாஞ்சா கயிறு அறுத்து நேர்ந்த சோகம் !

தடை செய்யப்பட்ட பட்டத்தின் மாஞ்சா கயிறு அறுத்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி அடுத்துள்ள ஹத்தராகி என்ற கிராமத்தை விஜய் - ஐஸ்வர்யா தம்பதியினர் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு தற்போது வர்தன் எரண்ணா என்ற 6 வயது ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது தந்தையுடன் சிறுவன் இரு சக்கர வாகனத்தில் கடைக்கு சென்றுள்ளார். அங்கு தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி விட்டு இருவரும் அதே பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள பழைய காந்தி நகர் மேம்பாலம் வழியே வந்துகொண்டிருக்கும்போது, முன்பக்கம் அமர்ந்திருந்த சிறுவன் கழுத்தில் திடீரென்று எங்கிருந்தோ ஒரு பட்டதில் மாஞ்சா நூல் ஒன்று பறந்து வந்து சிறுவனின் கழுத்தை அறுத்தது. இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பேச்சு மூச்சின்றி விழுந்துள்ளார்.

இதனை கண்டதும் பதறிப்போன சிறுவனின் தந்தை, சிறுவனை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கே சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடகாவில் மாஞ்சா நூலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவன் உயிரிந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “குப்பை வண்டியில் தவறவிட்ட வைர கம்மல் - மீட்டுக்கொடுத்த நகரமன்ற தலைவர்” : குவியும் பாராட்டு !