India

கேரளாவை அடுத்து மத்திய பிரதேசத்தில்.. தெருநாய் கடித்ததில் 5 வயது சிறுமி பரிதாப பலி!

கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகத் தெருநாய் கடித்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். தெருநாய்களைக் கட்டுப்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் சிறுவர்களைத் தெருநாய் தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற துப்பாக்கி ஏந்தி சாலையில் ஒருவர் நடந்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கேரள மாநிலத்தைப் போன்று மத்திய பிரதேசத்திலும் தெருநாய் கடித்ததில் 5வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், கர்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த சோனியா என்ற 5 வயது சிறுமி தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையிலிருந்த ஆறு தெருநாய்கள் திடீரென சிறுமி மீது பாய்ந்து கடித்துள்ளது.

மேலும், சிறுமி தப்பித்து ஓடிவிடாதபடி தெருநாய்கள் சுற்றிவளைத்துக் கடித்துள்ளன. இதைப்பார்த்த பொதுமக்கள் நாய்களை விரட்டி அடித்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெருவில் நடந்து சென்ற 5 வயது சிறுமியைத் தெருநாய் கடித்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 32 ஏக்கர் நிலத்தை குரங்குகளுக்கு எழுதிக் கொடுத்த ஆச்சரிய கிராமம்.. இந்தியாவில் எங்கு உள்ளது இந்த கிராமம்?