India

ஆந்திரா :தற்கொலை செய்த மகள்.. ஆத்திரத்தில் மகளின் காதலனை கொலை செய்து மகள் அருகே சமாதி கட்டிய கொடூர தந்தை!

ஆந்திர மாநிலம், துவாரகா திருமலை மண்டலம் அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தர் தனிகடப்பா பவன் கல்யாண் (வயது 24) என்பவரும் கொடுகுப்பேட்டையை சேர்ந்த மரிது ஷியாமளா (வயது 18) என்பவரும் கல்லூரி படிக்கும் போதே காதலித்து வந்தனர்.

இவர்கள் காதல் விவகாரம் இவர்களின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ஷியாமளா கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில், 10 நாட்களுக்கு முன்னர் நண்பர்களுடன் வெளியே சென்ற பவன் கல்யாண் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்காததால் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது பவன் கல்யாணை இறுதியாக ஷியாமளாவின் தந்தை நாகேஸ்வரராவ் கடைசியாக அழைத்து பேசியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது.

மகள் தற்கொலை செய்துகொண்டதால் கடும் அதிருப்தியில் இருந்த நாகேஸ்வரராவ் இதற்கு காரணம் பவன் கல்யாண்தான் என நினைத்து அவரை கொலை செய்ய முடிவுசெய்துள்ளார். அதன்படி அவரை தனியே அழைத்த அவர், பவன் கல்யாணை அடித்து கொலை செய்து, தனது மகள் ஷியாமளாவின் சமாதிக்கு அருகில் அவரது சடலத்தை புதைத்து சமாதி கட்டியது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலிஸார் சிறையில் அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: அடுத்த பிரதமர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்தான்.. அடித்துச் சொல்லும் இங்கிலாந்து ஊடகங்கள் !