India

தொடரும் SELFIE மோகம்.. ஆற்றங்கரையில் நின்று போட்டோ.. தவறி விழுந்த சகோதரிகளுக்கு நேர்ந்த சோகம் !

ஆற்றங்கரை ஓரம் நின்று மொபைலில் SELFIE எடுத்த சகோதரிகள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் மும்பையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பை பகுதியைச் சேர்ந்தவர்கள் நீலா (வயது 24), சந்து(வயது 15). சகோதரிகளான இவர்கள், சம்பவத்தன்று மாலை அவர்கள் தோழிகளுடன் வெளியே சென்றனர். அப்போது அங்கிருந்த ஒரு ஆற்றின் அருகே சென்றவர்கள், ஆற்றின் அழகை ரசித்தபடியே போட்டோ எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து அந்த சகோதரிகள் ஆற்றின் கரையோரம் நின்று ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு SELFIE எடுத்தனர். அப்போது இருவரும் கால் தவறி ஆற்றுக்குள் விழுந்தனர். ஆற்றில் வெள்ளநீருடன் சேர்ந்து சகதியும் இருந்ததால் அவர்களால் வெளியில் வரமுடியவில்லை.

இதையடுத்து அவர்களுடன் இருந்தவர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், சகோதரிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் அவர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதால் அவர்களை தேடி நீண்ட நேரத்திற்கு அவர்களது உடல்களை மீட்டனர்.

பின்னர் அதனை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்று ஆபத்து அறியாமல் பலரும் தங்களது ஆசைக்காக SELFIE எடுக்கும் போன்ற செயல்களை செய்வதால் இது போன்று பின்விளைவு ஏற்படுகிறது.

இராமநாதபுரம் இளைஞர்

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த அஜய் பாண்டியன் (வயது 28) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி அருவியில் நண்பர்களுடன் சேர்ந்து ஈரமான பாறையின் மேல் ஏறி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் எதிர்ப்பாராத விதமாக பாறை வழுக்கி அருவியின் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கதறியுள்ளனர். இதையடுத்து காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அவர்கள் விரைந்து வந்து அஜய் பாண்டியனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் எவ்வளவு தேடியும் அஜய்யின் உடல் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அஜய் பாண்டியனின் உடலை தொடர்ந்து 6 நாட்களாக தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள மீனாட்சி ஓடை என்ற இடத்தில் அஜய்யின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அஜய் பாண்டியன் அருவியில் விழும் வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தேனி : ஆற்றில் குளிக்க சென்ற புதுமண தம்பதியினர்.. கணவரை காப்பாற்ற முயன்ற மனைவிக்கும் நேர்ந்த சோகம் !