India

இன்று உலக உணவு தினம் : ஆப்பிரிக்க நாடுகளை விட படுமோசம் - இந்தியாவுக்கு இந்த நிலை எதில் தெரியுமா?

உலக உணவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் இன்னும் பலருக்கு மூன்று வேளை உணவு கிடைக்காத நிலைதான் நீடிக்கிறது. மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசால் இந்தியாவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, இரண்டாவது முறையாக ஆட்சி செய்துவரும் பா.ஜ.க அரசால் நாட்டு மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. இதில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆட்டோமொபையல், விவசாயத்துறை என அனைத்து துறைகளுமே மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. இந்த பின்னடைவினால் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். பல மாநிலங்களில் உணவு கிடைக்காமல், மக்கள் பசியால் இறந்துபோகும் அவல நிலை உருவாகியுள்ளது.

அரசு சார்பில் குழந்தைகளுக்கு வழங்கும் சத்துணவு கூட வட மாநிலங்களில் முறையாக வழங்கப்படவில்லை. அதுதொடர்பான புகார்கள் ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில்,2022-ஆம் ஆண்டிற்கான உலக பட்டினி குறியீட்டில் (GHI) இந்தியா, இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான இடத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், 2022-ஆம் ஆண்டிற்கான புதிய உலக பட்டினிக் குறியீட்டை (Global Hunger Index -2022), ‘கன்சர்ன் வேர்ல்ட்வைட்’ (Concern Worldwide), ‘வெல்ட் ஹங்கர் ஹில்ப்’ (Welt Hunger Hilfe) அமைப்புகள் தற்போது வெளியிட்டுள்ளன. இதில், 2020, 2021-ஆம் ஆண்டுகளைக் காட்டிலும் மேலும் மோசமான இடத்திற்கு இந்தியா போயிருக்கிறது. பட்டினி தொடர்பான தரவுகள் கிடைக்கப் பெற்ற 121 நாடுகளில் இந்தியா 107 என்ற இடத்திற்கு சென்றுள்ளது.

இந்தியாவில் குழந்தைகள் உரிய எடையில்லாமல் இருப்பது 2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபோது 15.1 சதவிகிதமாக இருந்தது. இது 2022-இல் 19.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதேபோல ஊட்டச்சத்து பற்றாக்குறை, 2018-2020இல் 14.6 சதவிகிதமாக இருந்தது, 2019-2021இல் 16.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

Also Read: “பசிக்கொடுமை உள்ள நாடுகளில் 107வது இடத்தில் இந்தியா” : மோடி ஆட்சியில் இந்தியாவை முந்திய அண்டை நாடுகள்!