India

வீட்டை ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகளை கெஞ்ச வைத்த நபர்.. லாட்டரியால் அடித்த அதிர்ஷ்டம் ! நடந்தது என்ன?

உலகம் முழுவதும் லாட்டரி டிக்கெட் விற்பனை மூலம் சிலர் கோடீஸ்வரனாகி வருகின்றனர். அவர்கள் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் ஊடக கவனம் பெறுகின்றனர். இந்தியாவில் கேரளாவில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் விதமாக அரசே லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வருகிறது.

அதில் ஏழை, எளியவர்கள் கூட பல லட்ச ரூபாய்களை வென்று வருகின்றனர். சமீபத்தில் கூட காசர்கோட்டில் உள்ள மஞ்சேஷ்வர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது பவா என்பவர் லாட்டரியில் ரூ.1 கோடி ரூபாய் வென்றுள்ளார். கடன் காரணமாக வீட்டை விற்கவிருந்த அவருக்கு இறுதியில் ஜாக்பாட் அடித்தது.

இந்த நிலையில், கேரளாவில் மீண்டும் அதேபோன்ற சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் மைனகாபள்ளி பகுதியை சேர்ந்தவர் பூங்குஞ்சு (வயது 40). இவர் வீடு கட்டுவதற்காக வங்கியில் 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். தொடக்கத்தில் ரூ. 2 லட்சம் கடனை கட்டிய நிலையில் மீதமுள்ள தொகையை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.

பணத்தை கட்டுமாறு வங்கி அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், நேற்று முன் தினம் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்ய போவதாக நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்றுள்ளனர். இதனால் பூங்குஞ்சு பெரும் மனவருத்தத்தில் இருந்துள்ளார்.

அப்போது அவருக்கு பெரும் அதிர்ஷ்டம் ஒன்று அடித்துள்ளது. பூங்குஞ்சு கடந்த ஒரு மாதத்திற்கு முன் வாங்கிய லாட்டரியில் ரூ.70 லட்சம் பணம் விழுந்திருப்பதாக அவருக்கு தகவல் வந்துள்ளது. இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருந்த அவருக்கு மற்றொரு மகிழ்ச்சி சம்பவமும் நடைபெற்றுள்ளது.

எந்த வங்கி அதிகாரிகள் அவரது வீட்டை ஜப்தி செய்வதாக கூறினார்களோ அவர்கள் பூங்குஞ்சை தேடிவந்து லாட்டரியில் விழுந்த பணத்தை தங்கள் வங்கியில் டெபாசிட் செய்யுமாறு கெஞ்சியுள்ளனர். அதைத் தொடர்ந்து அந்த பணத்தை ஜப்தி செய்வதாக கூறிய வங்கியிலேயே அவர் தனது பணத்தை டெபாசிட் செய்துள்ளார். இந்த தகவல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: திடீரென தீப்பிடித்த ஓடும் பேருந்து.. உடல் கருகி 21 பேர் பலி.. உயிர்பிழைக்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!