India

‘கோயிலுக்குள் வரக்கூடாது..’ பட்டியலின குடும்பத்தை விரட்டியடித்த அர்ச்சகர்.. கர்நாடகாவில் தொடரும் தீண்டாமை

பா.ஜ.க ஆளும் கர்நாடக மாநிலம், தும்கூர் பகுதியில் நீட்டூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 'முளுகட்டம்மா' என்ற கோயில் உள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் பலரும் வந்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் சம்பவத்தன்று பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று கோயிலுக்குள் பூஜை செய்ய முற்பட்டனர்.

அப்போது அங்கு வந்த அந்த கோயிலின் அர்ச்சகர், அந்த குடும்பத்தினரை தடுத்து நிறுத்தினார். மேலும் நீங்கள் இங்கு பூஜை செய்யக்கூடாது என்று கூறியதோடு, கோயிலுக்குள்ளும் வரக்கூடாது என்றும், வெளியே செல்லுமாறும் அவர்களை கண்டித்துள்ளார்.

வெளியே போக சொன்னதால் கோபமடைந்த பட்டியலின குடும்பத்தினர், 'ஏன்?' என்று கேள்வியெழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சகர், "நீங்களெல்லாம் பூஜை செய்ய கூடாது.. உள்ளே வந்தால் தீட்டு.." என்று கூறி விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ வெளியானதையடுத்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கோயிலுக்குள் வந்த பட்டியலின குடும்பத்தை விரட்டியடித்த அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கையும் எழுந்து வருகிறது.

முன்னதாக இதே கர்நாடகாவில் இந்து கடவுளின் சிலையைத் தொட்டதற்காக பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் தங்களை தீட்டு என்று சொல்லும் 'ஹிந்து மதம்' எங்களுக்கு வேண்டாம் என்று கூறி, அந்த பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் அனைவரும் புத்த மதத்தை தழுவினர்.

இந்த நிலையில் தற்போது கோயிலுக்குள் பூஜை செய்யக்கூடாது என்று கூறி பட்டியலின குடும்பத்தை அர்ச்சகர் விரட்டியடித்துள்ள சம்பவம் மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சாமி சிலையைத் தொட்டதற்காக ரூ.60 ஆயிரம் அபராதம்: கர்நாடகாவில் பட்டியலின குடும்பத்திற்கு நேர்ந்த அவலம்!