India

காதலியை கொன்று புதைத்த காதலன்.. 2 ஆண்டுக்கு பின் எலும்புக்கூடாக உடல் மீட்பு: உ.பி-யில் பகீர் சம்பவம்!

உத்தர பிரதேச மாநிலம், கிதாவுத் கிராமத்தைச் சேர்ந்தவர் குஷ்பு. இளம் பெண்ணான இவர் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதியிலிருந்து மாயமாகியுள்ளார். அப்போது அவரது தந்தை பிக்ராம் சிங் மகள் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை செய்தபோது குஷ்பு, கௌரவ் என்ற இளைஞரைக் காதலித்தது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் கௌரவ் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். இதனால் அவர் மீது போலிஸாருக்கு சந்தேகம் அதிகரித்து அவரை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதையடுத்து கடந்த சனிக்கிழமையன்று கௌரவை போலிஸார் கைது செய்து விசாரணை செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. சம்பவத்தன்று குஷ்பு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கௌரவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதனால் அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் குஷ்புவின் உடலைத் தனது வீட்டிலேயே கௌரவ் புதைத்துவிட்டு, குடும்பத்துடன் தப்பி ஓடியது விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து போலிஸார் வீட்டில் தோண்டியபோது எலும்புக்கூடு ஒன்றை வெளியே எடுத்தனர். மேலும் குஷ்புவின் உடைமைகளையும் போலிஸார் மீட்டுள்ளனர். பின்னர் கௌரவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Also Read: துணியைக் காயவைத்தபோது நடந்த துயரம். தந்தை - மகன் பரிதாப பலி: தாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!