India

ரூ.500-க்காக பிரச்னை.. மனைவியை மிரட்ட தூக்கு மாட்டிய கணவர்.. இறுதியில் நேர்ந்த அவலம் !

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் ராம்ஜி ஷர்மா (வயது 36). துணிக்கடையில் வேலை பார்த்து வரும் இவர், தனது மனைவி சாந்தினி தேவி என்பவருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், பண்டிகை காலம் வருவதால் துணி எடுப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது மனைவியிடம் ரூ.2000 கொடுத்து வைத்துள்ளார் ராம்ஜி. ஆனால் தற்போது அவருக்கு அவசரமாக 500 ரூபாய் தேவைப்பட்டதால், தான் கொடுத்து வைத்திருந்த பணத்தில் இருந்து ரூ.500 கேட்டுள்ளார். சாந்தினி தேவியோ அவ்வளவு பணம் உங்களுக்கு எதற்கு என்று கேட்கவே அதற்காக சரியான காரணத்தை கூறாமல் இருந்திருக்கிறார் ராம்ஜி.

இதனால் சம்பவத்தன்று இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த ராம்ஜி தனது மனைவியிடம் இருந்து எப்படியாவது பணத்தை வாங்கிவிட வேண்டும் என்று எண்ணியுள்ளார். அதன்படி பணத்தை தரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார்.

மனைவியோ கணவரை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். எனவே தனது அறைக்கு சென்ற கணவர் கதவை பூட்டி வைத்து மனைவியின் சேலையை எடுத்து தூக்கு மாட்டி, தனது கழுத்தை சேலையின் ஓட்டைக்குள் வைத்து தொங்கி நிலையில் மீண்டும் மிரட்டியுள்ளார். இருப்பினும் மனைவி அதனை கவனிக்காமல் தனது வெளியை பார்த்து வந்துள்ளார்.

அந்த சமயத்தில் அவரது கால் இடறியதில் நிலைதடுமாறி அவரது கழுத்து சேலையில் சிக்கிக்கொண்டது. இதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இதனிடையே சத்தம் திடீரென்று நின்றதால் அறைக்கு வந்து பார்த்த மனைவி, தனது கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டதும் அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார்.

மேலும் அக்கம்பக்கத்தினரை அழைத்து கணவரின் உடலை கீழே இறக்கி, காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் விரைந்து வந்த அவர்கள் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து மனைவி சாந்தினி தேவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “தயவு செஞ்சு யாரும் Download பண்ணாதீங்க” கதறி அழுத சீரியல் நடிகை.. எச்சரித்த சைபர் கிரைம்! -நடந்தது என்ன?