India

கொரோனா மரணம்: 18 மாதமாக கணவர் சடலத்துக்கு கங்கை நீரை தெளித்த மனைவி.. உ.பி-யில் அதிர்ச்சி !

கடந்த 2021- ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம், கான்பூரை சேர்ந்த விம்லேஷ் தீட்சித் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

அவருக்கு தனியார் மருத்துவமனை ஏப்ரல் 22, 2021 அன்று திடீர் இருதய சுவாச நோய்க்குறி காரணமாக இறந்ததாகக் கூறி இறப்பு சான்றிதழும் அளித்துள்ளது. ஆனால் அவர் மனைவி அவர் கோமா நிலைக்கு சென்றதாக கருதி கடந்த 18 மாதங்களாக அவர் உடலை வீட்டிலேயே வைத்துள்ளார்.

நாளாக நாளாக கணவரின் உடல் சிதையத்தொடங்கியுள்ளது. ஆனால் அவர் மனைவி தினமும் கங்கை நீரை கொண்டு கணவரின் உடலில் தொடர்ந்து தெளித்து வந்துள்ளார். மேலும், ஆக்சிஜன் சிலிண்டர்களை அவர் வீட்டுக்கு அடிக்கடி எடுத்துவந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த பகுதி மக்கள் மூலம் இந்த தகவல் போலிஸாருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் பொலிஸாரும் சுகாதாரத்துறையினரும் அந்த இடத்துக்கு வந்த போது விம்லேஷ் தீட்சித் இன்னும் உயிருடன் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்பின்னர், மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகு அவரின் உடலை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல சுகாதாரக் குழுவை அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர். அங்கு சோதனையில், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ரூ.25 கோடி பரிசு கிடைத்தும் மனவருத்தத்தில் கேரள நபர்.. சொந்த வீட்டில் கூட நிம்மதி இல்லை என புலம்பல் !