India

சாலையில் பெண்ணுக்கு பிரசவம்.. 2 கிலோ மீட்டர் பெற்ற குழந்தையை நடந்தே தூக்கி சென்ற தாய்: ஒடிசாவில் அவலம்!

ஒடிசா மாநிலம் தஸ்மந்திபூர் பகுதிக்கு உட்பட்ட துங்கால் கிராமம். இந்த கிராமத்தில் சாலை வசதி இல்லை. மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக பெய்த கனமழையில் அப்பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக இருந்துள்ளது.

இந்நிலையில், துங்கால் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ்-க்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஆனால் ஆம்புலன்ஸ் கிராமத்திற்கு வரும் வழியில் சாலையில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கர்ப்பிணியை ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து ஆம்புலன்ஸில் ஏறுவதற்காக கர்ப்பிணியும் அவரது உறவினர்களும் நடந்து சென்றுள்ளனர். அப்போது கர்ப்பிணிக்கு பிரசவ வலி அதிகமாகியுள்ளது. பின்னர் அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

பின்னர் பிறந்த குழந்தையை அவர் கையில் தூக்கிக் கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்திற்கு நடந்தே வந்துள்ளனர். பிறகு அதில் ஏறி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். தற்போது மருத்துவமனையில் தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமுடன் இருக்கின்றனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகி ஒடிசா மாநிலத்தில் மருத்துவ சேவை எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதை இந்த சம்பவம் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: அசாம் : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மாமா.. யாரிடமும் சொல்லக்கூடாது என சிப்ஸ் வாங்கி கொடுத்த அவலம் !