India

காதல் விவகாரம் : பெண் காவலரை கூலிப்படை ஏவி கொலை செய்த மற்றொரு பெண் காவலர்.. கர்நாடகாவில் அதிர்ச்சி !

கர்நாடக மாநிலம் துமகூரு பகுதியைச் சேர்ந்தவர் சுதா (வயது 37). ஹிலியூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்த இவரது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளுடன் தனியே வாழ்ந்து வந்துள்ளார். சுதா பணிபுரியும் அதே காவல் நிலையத்தில் மற்றொரு ஏட்டாக பணிபுரிந்து வருபவர் ராணி (வயது 30). இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ராணிக்கு சுதாவுக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது. ஏனென்றால் வேறொரு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் ஒருவரை இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு வந்துள்ளது.

இதனால் கோபமடைந்த ராணி, சுதாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சுதாவின் உறவினர் மஞ்சுநாத் என்பவரை கொலை செய்ய பயன்படுத்தியுள்ளார். இதற்காக மஞ்சுநாத்துக்குக் ரூ.5 லட்சம் பணமும் கொடுத்துள்ளார் ராணி.

ஆனால் பலமுறை முயற்சித்தும் சுதாவை மஞ்சுநாத்தால் கொல்ல முடியவில்லை. இதனால் ராணியும் அவரை சரமாரியாக திட்டியுள்ளார். இதனால் கோபம் தாங்காத மஞ்சுநாத், சுதாவை எப்படியாவது கொன்றாக வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று சாலையில் சென்றுகொண்டிருந்த சுதாவிற்கு, நிகில் என்பவர் காரில் வந்து லிப்ட் கொடுத்துள்ளார். அவரும் வீட்டிற்கு சீக்கிரம் சென்று விடலாம் என்று எண்ணி வாகனத்தில் ஏறியுள்ளார். சிறிது தூரத்திலேயே மஞ்சுநாத்தும் அதே வாகனத்தில் ஏறியுள்ளார். பின்னர் சுதாவின் மீது பேப்பர் ஸ்பிரே அடித்து அவர் நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் மஞ்சுநாத்.

இதில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போன சுதாவின் உடலை பேருந்து நிலையம் அருகே உள்ள புதருக்குள் தூக்கி சென்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பின்னர் சுதாவின் சடலம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரியவந்ததையடுத்து அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுதாவின் உறவினர் மஞ்சுநாத் மீது சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து மஞ்சுநாத்தை விசாரணை மேற்கொள்ள முயன்ற போது, அவர் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இதயடுத்து மஞ்சுநாத்தின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி, அவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த விவகாரத்தில் நிகில், ராணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 6 பேரை திருமணம் செய்த மதுரை பெண்.. நகை, பணத்தை திருடி சென்றது அம்பலம்.. சிக்கியது எப்படி ?