India

சாமி சிலையைத் தொட்டதற்காக ரூ.60 ஆயிரம் அபராதம்: கர்நாடகாவில் பட்டியலின குடும்பத்திற்கு நேர்ந்த அவலம்!

இந்தியா முழுவதுமே பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகள் நடந்து கொண்டே இருக்கிறது. அண்மையில் ராஜஸ்தானில் உயர் சமூகத்தைச் சேர்ந்தவரின் தண்ணீரை குடித்தற்காகப் பட்டியலின சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அதேபோல் உத்தர பிரதேசத்தில் கழிவறைக்குச் சென்ற பட்டியலின மாணவனைப் பள்ளி ஆசிரியர்கள் தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது. இப்படித் தொடர்ந்து பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவது தொடர்கதையாகிவிட்டது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இந்து கடவுளின் சிலையைத் தொட்டதற்கா சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், கோபால் மாவட்டம் மாலூர் தாலுக்காவுக்கு உட்பட்ட ஹீல்லேரஹள்ளி கிராமத்தில் புதிதாகக் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதற்காகக் கிராம மக்கள் விழா எடுத்துள்ளனர்.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சேத்தன் என்ற பட்டியலின சிறுவன் ஒருவன் சாமி சிலையைத் தொட்டதாகக் கூறப்படுகிறது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சிறுவனைத் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.

இதையடுத்து, சாமி சிலையைத் தொட்டதற்காகச் சிறுவனின் குடும்பத்துக்கு ரூ. 60 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என ஊர்மக்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை ஊருக்குள் வரக்கூடாது எனவும் ஒதுக்கிவைத்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: எலிசபெத் ராணி ஊர்வலத்தில் போராட்டம்.. ட்ரெண்டாகும் HASHTAG.. பிரிட்டனில் முடிவுக்கு வருகிறதா முடியாட்சி ?