India

“போதைப்பொருள் கடத்தல் பொருளாதாரத்தை வீழ்த்தும்.. அது ஒரு சமூக நோய்” : சிறப்பு நீதிமன்றம் கருத்து!

சென்னை பல்லாவரத்தில் 56 கிலோ கஞ்சா விற்க முயன்ற வழக்கில், தேனியைச் சேர்ந்த நான்கு பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ஜமீன் பல்லாவரத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி பல்லாவரம் போலிஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். அங்கு தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த பாண்டியன், கதிரேசன், மணிமாறன் மற்றும் தெய்வம் ஆகிய நான்கு பேர் கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்தனர்.

அவர்களை கைது செய்த போலிஸார், 56 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களுக்கு எதிராக போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற முன்பு விசாரணைக்கு வந்தது சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜராகி குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதால் உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார்,வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியட் புஷ்பா,

வழக்கில் பாண்டியன் உள்பட நான்கு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, நால்வருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அந்த தீர்ப்பில், போதைப்பொருள் பயன்பாடு என்பது ஒரு சமூக நோய் என்றும் போதைப்பொருள் கடத்தல் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்துவது மட்டுமல்லாமல், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணம் பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீப காலங்களில் இளம் பருவத்தினர் போதைப்பொருள் பயன்படுத்துவது ஆபத்தான விகிதத்தில் உள்ளதாகவும், இது ஒட்டுமொத்த சமூகத்திலும் கொடிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Also Read: "ஒரு பட்டன் Press பண்ணுனா சுடச்சுட ரொட்டி.." - இலவச சாப்பாடு இயந்திரத்தை அறிமுகம் செய்த துபாய் அரசு !