India

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மருமகள்.. மகன் எடுத்த விபரீத முடிவால், மாமியாரும் தற்கொலை !

புதுச்சேரி, திருபுவனம் அடுத்த சன்னியாசி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரும் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த சந்தியா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.

செவிலியராக பணியாற்றி வந்த சந்தியா, திருமணத்திற்கு பிறகு கணவர் ஆனந்த், மாமியார் அன்னக்கிளி ஆகியோருடன் சன்னியாசி குப்பத்தில் வாழ்ந்து வந்தார். 8 மாதங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த சந்தியாவுக்கும், அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மகன் ஆனந்தும் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாமியார் - மருமகள் இடையே சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை கண்டதும் கணவர் ஆனந்த் தனது தாயாரை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் மனமுடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனை கண்ட தாயார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனது மகனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அங்கு ஆனந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தனது மருமகள் தன்னால் இறந்ததாகவும், அதனால் தனது மகனும் தன்னாலே இறக்க முயற்சித்ததாகவும் எண்ணிய தாய் அன்னக்கிளி தனது வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நண்பர்களே இப்போ என்ன ஆச்சுன்னா.. TTF வாசன் மீது வழக்குப்பதிவு : போலிஸ் அறிவிப்பில் சொல்லியிருப்பது என்ன?