India

பட்டியலின சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரிக்க முயற்சி.. உ.பி-யில் தொடரும் கொடூரம் !

உத்தர பிரதேச மாநிலம் பிலிபித் பகுதியை அடுத்துள்ள குன்வார்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 16 வயதுடைய பட்டியலின சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த சிறுமி வெளியில் சென்று தங்களை பற்றி காட்டி கொடுத்து விடுவாரோ என்று எண்ணிய அவர்கள், அவரை எரித்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி அவரை எரிக்க முயன்றபோது அந்த வழியே சென்ற சிலர் அவர்களை கண்டனர்.

பிறகு அவர்கள் பயந்து சிறுமியை உயிருடன் விட்டுவிட்டு தப்பியோடினர். இதையடுத்து சிறுமியை கண்ட அவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை வாக்குமூலமாக அளித்தார்.

அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் இரண்டு பேரை போக்ஸோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி சுமார் 12 நாட்களுக்கு பிறகு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாகவே பட்டியலின சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவம் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அதிகமாக காணப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சத்தீஸ்கர் :சம்பள பாக்கியை கேட்ட இளைஞர்.. விமான நிலைய வாசலில் வைத்து கடுமையாக தாக்கிய இளம்பெண்கள் : VIDEO