India

கேரளாவை அச்சுறுத்தும் தெருநாய்கள்.. பிடித்துக்கொடுப்போருக்கு சன்மானம்.. அறிவிப்பு வெளியிட்ட கேரள அரசு !

கேரள மாநிலத்தில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாகத் தெருநாய் கடித்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். பலபேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த ஒருவாரத்தில் காசர்கோடு பகுதியில் மட்டும் 10 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த 12ம் தேதி கோழிக்கோடு பகுதியில் சிறுவன் ஒருவனை நாய்க் கடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது போன்ற சம்பவங்கள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதால் காசர்கோடு பகுதியில் தெருநாய்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்க ஒருவர் AIRGUN வகை துப்பாக்கியை ஏந்தியபடியே ஒருவர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் தெரு நாய்களிடம் இருந்து தங்களை பாதுகாக்குமாறு மரத்தில் ஏறி அமர்ந்து ஒருவர் தனிநபர் போராட்டமும் நடத்தினார்.

இந்த நிலையில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தெருநாய்களைப் பிடிக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தெரு நாய்களை பிடித்து தருவோர்களுக்கு ஒவ்வொரு நாய்க்கும் தலா ரூ.500 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு நாயையும் பிடிப்பதற்கு ரூ.300 என்றும், காப்பகத்திற்கு அழைத்துச் செல்ல ரூ.200 என்றும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Also Read: கேரளாவை அச்சுறுத்தும் தெருநாய்கள்.. சாலையில் நடக்கவே அச்சப்படும் மக்கள்: அங்கு நடப்பது என்ன?