India

எலி மருந்து கலந்த குளிர்பானத்தால் மரணம்.. மகளை விட நன்றாக படித்த மாணவரை கொலை செய்த தாய் வாக்குமூலம் !

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் இரண்டாவது மகனான பால மணிகண்டன் என்ற சிறுவன் தனியார் பள்ளி ஒன்றில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி பால மணிகண்டன் தனது பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றவர் மதியம் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது தான் பள்ளியின் காவலாளி கொடுத்த குளிர்பானத்தை குடித்த பின்னரே தனக்கு இப்படி நடந்ததாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவரின் பெற்றோர், மாணவரை மருத்துவமனையில் அனுமதித்ததோடு இது குறித்து பள்ளியில் விசாரித்தனர். அப்போது CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோது அதே வகுப்பை சேர்ந்த மாணவியின் தாயார், உறவினர் கொடுத்ததாக கூறி காவலாளியிடம் குளிர்பானத்தை கொடுத்தது தெரியவந்தது.

இதன்பின்னர் மாணவர்க்கு விஷம் கொடுக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதால் இது குறித்து மாணவரின் பெற்றோர் போலிஸில் புகார் அளித்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் குளிர்பானம் கொடுத்த மாணவியின் தாயாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாணவனுக்கு பேதி மாத்திரை கலந்து தான் கொலை செய்ய முயற்சித்ததாக கூறினார்.

இதனிடையே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவன் உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சிய போக்கே காரணம் என்று மாணவனின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சக மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியா தற்போது வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தான் கடைக்கு சென்று எலி மருந்து வாங்கி, மாணவன் பால மணிகண்டனுக்கு குளிர்பானத்தில் கலந்து கொடுத்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தனது மகளை விட நன்றாக படிக்கும் சக மாணவனை மாணவியின் தாயார் எலி மருந்து கொடுத்து கொன்றுள்ளது உறுதியாகியுள்ளது.

Also Read: போன் மூலம் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மகனால் சிக்கிய தந்தை.. பஞ்சாபில் பரபரப்பு !