India

சமூக வலைதளங்களில் இருக்கும் பெண்களே குறி.. - புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டி வந்த இளைஞர் கைது !

உத்தரபிரதேச மாநிலம் மதுரா பகுதியை சேர்ந்தவர் கணேஷ்சிங் (வயது 42). லாரி டிரைவராக பணியாற்றி வரும் இவர், சமூக ஊடகங்களை பயன்படுத்தி தவறான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அதாவது சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிடும் பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து, அதனை மார்பிங் செய்து வந்துள்ளார். அப்படி மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வைத்து ஆபாச வீடியோக்களை தயார் செய்து அதனை சம்பந்தப்ட்ட பெண்களுக்கு அனுப்பியுள்ளார். மேலும் அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

இதனால் பயந்த சில பெண்கள் அவர் கேட்டவற்றை அனைத்தயும் செய்து கொடுத்தனர். மேலும் சிலர் இது குறித்து தைரியமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு இளம்பெண் ஒருவருக்கு அவரது புகைப்படத்தை பயப்படுத்தி ஆபாசமாக உருவாக்கி அதனை அவருக்கு அனுப்பியுள்ளார். மேலும் அவரை தொடர்புகொண்டு தான் சொல்வதையெல்லாம் செய்ய வேண்டும், இல்லையனில் சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவே, அவர்கள் தொடர் குற்றத்தில் ஈடுபட்டு வந்த கணேஷ் சிங்கை வலைவீசி தேடி கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் முகநூல், ட்விட்டர், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெண்கள் வெளியிடும் புகைப்படங்களை வைத்து தான் இதனை செய்ததாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதோடு அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அவரது மொபைலில் பல பெண்களின் 500-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் இவர் 85-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்மீது வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இழிவான செயலில் இவர் மட்டும் தான் ஈடுபட்டுள்ளாரா அல்லது பின்னணியில் வேறு யாரும் இருக்கின்றனரா என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read: ”MLA-க்களை வாங்க பணம் இருக்கு.. ஆனா விவசாயிகளின் பூண்டு வாங்க பணமில்லையா ?” - பாஜகவை தாக்கிய காங்கிரஸ் !