India

டெல்லி : மெட்ரோ இரயிலில் தடுத்து நிறுத்தப்பட்ட சீக்கியர்.. போராட்டத்தில் குதித்த சீக்கிய அமைப்புகள் !

டெல்லி மெட்ரோ இரயில் நிலையத்தில் கடந்த 8-ம் தேதி தக்த் ஸ்ரீதம்தாமா சாஹிப் என்ற அமைப்பின் முன்னாள் நிர்வாகியான சீக்கிய மதத்தை சேர்ந்த ஜதேதாரான கியானி கேவல் சிங் என்பவர் தங்கள் மதவழக்கப்படி கத்தியுடன் பயணம் செய்ய முற்பட்டுள்ளார். அப்போது அவரை மெட்ரோ இரயில் நிலையத்தில் நுழைய விடாமல் அங்கிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் அவரது தலைப்பாகையையும் கழற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து அவர் புகார் அளித்தார். அவரளித்த புகாரில், "இந்திய அரசியமைப்பின் 25-வது பிரிவில் சீக்கியர்கள் சீக்கியர்களின் அடையாளமாக திகழும் டர்பன், கத்தயை எல்லா இடங்களுக்கும் எடுத்து செல்ல முடியும். அதற்கான அனுமதியும் உண்டு. எனவே சீக்கியர்களின் மத உணர்வை புண்படுத்தும்படி மெட்ரோ ரெயில் நிர்வாகம் நடந்து கொண்டது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் சீக்கியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர், மெட்ரோ இரயில் நிலையத்தின் தலைவர் மற்றும் தலைமை செயலருக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும் அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து 150 சீக்கியர்களுடன், சீக்கிய அமைப்பான பான்திக் டல்மேல் சங்கதன் என்ற அமைப்பு போராட்டம் நடத்தியது. இது சீக்கியர்களின் மீதான அடக்குமுறை என்று பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது டெல்லியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உ.பி : பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை.. பழிவாங்க இளைஞர்கள் செய்த கொடூரம்..