India

கடும் நெரிசல் - 3km தூரம் ஓடிச் சென்று அறுவை சிகிச்சை.. மருத்துவரின் மனித நேயத்திற்கு குவியும் பாராட்டு!

பெங்களூரில் கடந்த வாரம் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பல சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மழை நின்றபிறகும் கூட போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பாத்தால் மக்கள் நீண்ட நேரம் காத்துகிடக்கும் அவலத்திற்குத் தள்ளப்பட்டனர். இந்த சூழலில் மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்வதற்காக டிராபிக்கில் ஓடிச்சென்று மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்ஜாபூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்த் நந்தகுமார். இவர் மணிப்பால் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் அறுவை சிகிச்சை செய்வதற்காக, சர்ஜாபூர் - மாரத்தஹள்ளி சாலையில் மருத்துவமனை நோக்கி காரில் சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது டிராபிக் காரணமாக மருத்துவமனை செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் 15 நிமிடத்திற்குள் மருத்துவமனை சென்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும். ஆனால் 15 நிமிடத்தில் செல்லவேண்டிய இடத்திற்கு 1 மணி நேரம் ஆகும் என கூகுல் மேப் காட்டியுள்ளது. அதேநேரத்தில் நடந்துச் சென்றால் 30 நிமிடம் ஆகும் எனக் காட்டியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர் நந்தகுமார், காரை விட்டு இறங்கி சாலையில் ஓடத் தொடங்கியுள்ளார். மேலும் கையில் வைத்திருந்த பைகளுடன் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு ஓடிச் சென்று 20 நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்துள்ளார்.

இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலரின் பாராட்டையும் பெற்றது. மேலும் இதுதொடர்பாக டாக்டர் நந்தகுமார் கூறுகையில், “என்னுடைய நோயாளிகள் எனக்காக காத்திருக்கக்கூடாது. மேலும் அறுவை சிகிச்சை முடியும் வரை அவர்கள் சாப்பிடக்கூடாது என்பதால் வேகமாக ஓடிச் சென்று ஆபரேசன் செய்தேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “அமைச்சர் மெய்யநாதன் ஒரு ஸ்போர்ட்ஸ் நாதனாகவே மாறிவிட்டார்”: மேடையில் வைத்து புகழாரம் சூட்டிய முதலமைச்சர்!