India

ஹரியானா : நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி.. விநாயகர் சிலை கரைப்பின் போது நிகழ்ந்த சோகம்!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி முடிந்து விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்த நிலையில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் ஹரியானா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஆற்றில் இறங்கி விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.

அப்போது அங்குள்ள சோனிபேட் பகுதியின் மிமார்பூர் காட் என்ற இடத்தில் சிலை கரைப்பின்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் உறவினர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் இதே போல், மகேந்திரகர் பகுதியில் உள்ள கால்வாயில் கிராம மக்கள் விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது, ஆற்றில் நீர் வரத்து அதிகமாகி வெள்ளம் ஏற்பட்டதில் ஒன்பது பேர் ஆற்றுடன் அடித்து செல்லப்பட்டானர். இதையடுத்து விபத்து நடந்த இரண்டு இடங்களிலும் மீட்பு பணியினர் தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 9 பேரில் 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஒருவர் மட்டும் சடலமாக மீட்பட்டார்; அதே போல் சோனிபேட் பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த குடும்பத்தினரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

விநாயகர் சிலை கரைப்பின்போது ஒரே மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் ஆற்றில் மூழ்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: LOAN APP விவகாரம் : மீண்டும் ஒரு கல்லூரி மாணவன் தற்கொலை.. கதறும் பெற்றோர் - ஆந்திராவில் பரபரப்பு !