India

மூவர்ணக்கொடியை வைத்து பைக்கை துடைத்த நபர்.. டெல்லியில் அவலம்.. வெளியான வீடியோவால் அதிர்ச்சி!

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பொதுமக்களும் தங்கள் வீடுகளில் கொடியேற்றலாம் என்ற ஒன்றிய அரசு அனுமதி அளித்து, வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது.

அதன்படி பிரபலங்களும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றினர். இது தவிர ஏராளமான பொதுமக்களும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றியதோடு, சிலர் சாலைகள் போன்ற பொதுஇடங்களிலும் தேசிய கொடியை பறக்கவிட்டனர்.

ஒன்றிய அரசின் இந்த திட்டத்துக்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது போன்ற செயல்கள் தேசிய கொடியின் மாண்புக்கு குந்தகம் விளைவிக்கும் என கூறப்பட்டது. அவர்கள் கூறியதை போல சுதந்திர தினம் முடிந்த பின்னர் பல இடங்களில் தேசிய கொடியை சிலர் தவறான நிலையில் வைத்திருந்தனர்.

இந்த நிலையில், டெல்லியில் பஜன் புரா பகுதியை சேர்ந்த ஒருவர் தேசியக்கொடியை வைத்து தனது இருசக்கரவாகனத்தை துடைக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த பலரும் அந்த நபரை கைது செய்யவேண்டும் என்று கூறி வருகின்றனர்.

சில நாட்களுக்கு இதேபோன்ற ஒரு சம்பவம் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் நடைபெற்றுள்ளது. சைக்கிள் கடை வைத்துள்ள ஒருவர் தனது சைக்கிளை மூவர்ணக் கொடியால் சுத்தம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: டாடா சன்ஸ் சைரஸ் மிஸ்த்ரி மரணம்.. விபத்துக்கு காரணம் மேம்பாலமா? விசாரணை ஆணையம் கூறுவது என்ன ?