India

உடன் படிக்கும் ஆண் நண்பருடன் பேசிய 5-ம் வகுப்பு சிறுமி.. கொலை செய்த பெற்றோர்: உ.பி-யில் அரங்கேறும் அவலம்!

உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்தவர் பப்லூ - ரூபி தம்பதியினர். இவர்களுக்கு செளமியா என்ற 10 வயது மகள் உள்ளார். இவர் அந்த பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அனைவரிடமும் சகஜமாக பேசி வரும் இந்த சிறுமியின் வகுப்பில் ஆண் நண்பர்கள் அதிகம்.

இந்த நிலையில் சிறுமியின் தந்தைக்கு அவர் ஆண்களுடன் பேசுவது பிடிக்கவில்லை. இதனால் சிறுமியை பலமுறை கண்டித்துள்ளார். மேலும் அவர் இனி வேறு ஆண்களுடன் பேசவே கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால் சிறுமி தனது நண்பர்களுடன் பேசுவதை தவிர்க்க தொடங்கியுள்ளார்.

ஆனால் படிப்பில் கெட்டிக்காரியான இவரிடம் வகுப்பு நண்பர்கள் சந்தேகம் கேட்பது வழக்கம். இது வகுப்பில் மட்டுமல்லாமல் வீட்டிற்கு வந்ததும் பாடம் தொடர்பாக போனிலும் உரையாடுவார். இதனை கண்ட அவரது தந்தை, தாயையும் கண்டித்துள்ளார். சிறுமியின் தாயும் சிறுமியிடம் இனி ஆண் நண்பர்களுடன் பழக கூடாது என்று பொறுமையாக கூறியிருக்கிறார்.

ஆனால் அவர்களை தவிர்க்க முடியாது சிறுமி மீண்டும் பேசிவந்துள்ளார். இதனால் கோபமடைந்த தாய் மற்றும் தந்தை சிறு மகள் என்றும் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த வாரம் இரவு மகளை ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்து சென்ற பெற்றோர், சுமார் 10 மணியளவில் அந்த பகுதியில் இருக்கும் யமுனா கால்வாய் மேம்பாலத்துக்கு அழைத்து சென்று அவரை தூக்கி கால்வாயில் வீசினர். இதில் தண்ணீரில் விழுந்த சிறுமி மூச்சு திணறி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது விசாரணை மேற்கொண்டதில் பெற்றோர் நடவடிக்கையில் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து சிறுமியை கொன்ற பெற்றோரை அதிகாரிகள் கைது செய்ததோடு, சிறுமியின் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மூளைச்சாவு அடைந்த நபர்.. "உறுப்பு தானத்துக்கு தயாரானபோது நடந்த medical miracle" :அமெரிக்காவில் ஆச்சர்யம்!