India

கர்நாடகா : உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர், நடத்துநர்.. Smart phone வழங்கி கெளரவிப்பு !

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி தற்போது வரை பெய்து வருகிறது. குறிப்பாக அம்மாநில தலைநகர் பெங்களுருவில் கடும் கனமழை பெய்து வருகிறது. அண்மைக்காலமாக அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

மேலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கிருக்கும் அணைகள், ஏரி, குளங்கள் உட்பட நீர் நிலைகள் நிரம்பிவருகின்றன. அதோடு பணிக்கு செல்லவிருக்கும் ஊழியர்கள் படகு உள்ளிட்டவை வரவழைத்து அதில் செல்கின்றனர். அந்த வகையில், அம்மாநில ராமநகர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் உரகஹள்ளியில் இருந்து ராமநகர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து, ஒரு சுரங்கபாதையில் தேங்கி இருந்த மழைநீரில் சிக்கிக்கொண்டது. அப்போது அந்த பேருந்தின் ஓட்டுநர் லிங்கராஜ் மற்றும் நடத்துநர் வெங்கடேஷ் ஆகியோர் நீச்சல் தெரியாத போதும் தங்களது உயிரை பணயம் வைத்து பேருந்தில் இருந்து இறங்கி மழைநீரில் நடந்து சென்று கிராம மக்களை உதவிக்கு அழைத்து வந்தனர். பின்னர் பேருந்தில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

இது தொடர்பான செய்திகள் வெளியானதையடுத்து அம்மாநில போக்குவரத்து கழக இயக்குனர், அவர்களை வரவழைத்து இருவருக்கும் பாராட்டு தெரிவித்ததோடு அவர்களுக்கு பரிசாக ஸ்மார்ட் போன் வழங்கி கௌரவித்துள்ளார்.