India

வேலை செய்யும் இடத்திலேயே ரூ. 13 லட்சம் சுருட்டிய ஊழியர்.. போலிஸாரிடம் சிக்கியது எப்படி?

மும்பையில் உள்ள பட்டய கணக்கியல் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் சுமித் வடேகர். இவர் சனிக்கிழமையன்று வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து ரூ.13.75 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர் திடீரென சுமித் வடேகர் மூக்கை கைக்குட்டையால் அழுத்தி அவரை மயங்கவைத்துள்ளார். பிறகு அவரிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

பிறகு அங்கு வந்த மற்றொரு ஊழியர் சுமித் வடேகர் மயங்கி இருப்பதை பார்த்து உடனே அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போலிஸார் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் குளோரோபாம் ஸ்ப்ரேவை கைக்குட்டையில் ஊற்றி அதனை சுமித் வடகரின் முகத்தில் வைத்து மயக்கமடைய செய்யும் காட்சி பதிவாகிருந்தது.

மேலும் இந்த செயல் செய்வதற்கு முன்பு மர்ம நபரிடம் வடகர் ஏதோ கையில் சைகை செய்த காட்சியும் சி.சி.டி.வியில் பதிவானதை போலிஸார் பார்த்துள்ளனர். இதனால் அவர் மீது போலிஸாருக்கு சந்தேகம் வந்துள்ளது.

இதையடுத்து மருத்துவமனையில் இருந்த அவரிடம் போலிஸார் விசாரணை செய்தபோது, நண்பருடன் சேர்ந்து திட்டம் போட்டு பணத்தை கொள்ளையடித்து தெரியவந்துள்ளது. பின்னர் போலிஸார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: 1 வயது குழந்தையை கவ்விய புலி.. கடுமையாக போராடி காப்பாற்றிய இளம் சிங்கப்பெண்.. ம.பி-யில் பதைபதை சம்பவம் !