India

ஜார்கண்ட் : பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பழங்குடியின சிறுமி.. தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த அவலம் !

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா பகுதியை சேர்ந்தவர் பழங்குடியின 14 வயது சிறுமி. இவர் நேற்றைய முன்தினம் அந்த பகுதியில் உள்ள ஒரு வயல்வெளி அருகே இருக்கும் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். சிறுமி தூக்கில் தொங்கியிருப்பதை கண்ட அந்த பகுதிவாசிகள் உடனே இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். பிறகு இந்த சம்பவம் குறித்து அவர்கள் நடத்திய விசாரணையில், அந்த பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அர்மன் அன்சாரி என்ற இளைஞர், சிறுமிக்கு திருமணம் ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதனிடையே சிறுமி 3 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக உடற்கூறாய்வு அறிக்கையில் தெரியவந்தது. இதனால் விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர், அர்மன் அன்சாரியை கைது செய்து விசாரித்தனர். அப்போது தான் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் தான் கொலை செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்து வருகிறார். இதனால் குழப்பத்தில் இருக்கும் காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Jharkhand cm

இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கூறுகையில், "தும்காவில் நடந்த சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சிறுமியின் குடும்பத்தினருக்கான நீதியை உறுதி செய்யும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தும்கா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இறந்த மகளுக்கு கடவுள் அமைதி கொடுக்கட்டும், அந்த குடும்பத்திற்கு வலிமை அளிக்கட்டும்" என்றார்.

முன்னதாக இதே தும்கா பகுதியில் 16 வயதுடைய அங்கிதா என்ற சிறுமி இரண்டு நபர்களால் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பழங்குடியின சிறுமி கொல்லப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: CHINA LOAN APP வழக்கு : Paytm, Cashfree, Razorpay-ல் அதிரடி ரெய்டு.. 17 கோடி பறிமுதல் செய்த அமலாக்கத்துறை